Thursday 30 July 2015

யாரையும் சார்ந்திருக்காமல் சுயேச்சையாக வாழ்வது குறித்து...

உளமாடும் உரையாடல்

(ஏற்கெனவே தெரிவித்தது போல் இது நெருக்கமானவர்களோடு அவ்வப்போது நடத்திய உரையாடல்களின் பதிவு. அந்த உரையாடல்களிலிருக்கும் பொதுச்செய்தியைப் பகிர்ந்துகொள்வதே இதன் நோக்கம். அந்த நெருக்கமானவர்கள் யார், உடனிருப்பவர்களா, உற்ற தோழமைகளா, பொறுப்புகளில் இருப்பவர்களா, குறிப்பிட்ட அடையாளமற்றவர்களா, பெண்களா, ஆண்களா, மாற்றுப் பாலினத்தவர்களா, சமவயதினர்களா, வயது கூடியவர்களா, குறைந்தவர்களா... என்ற குடைவுகளின்றி படிக்கக் கேட்டுக்கொள்கிறேன். விளக்கம் அளித்தது மட்டுமல்லாமல், விளக்கம் பெற்றதும் நானாக இருக்கக்கூடும் என்பதால் அதையும் கடந்து, உரையாடலுக்குள் மட்டும் பயணிக்க வேண்டுகிறேன்.)

“என்ன திடீரென்று ஆள் காணாமப் போயிட்ட? என்னோடுதான் தொடர்பில் இல்லைன்னு பார்த்தால் நம் நண்பர்கள் பலரும் உன்னோடு தொடர்புகொள்ள முடியலைன்னு சொன்னாங்களே...”

“ஒண்ணுமில்லை...”

“ஒண்ணுமில்லைன்னு நீ சொல்றதால ஏதோ இருக்குது. எதுவுமே இல்லாம பேரண்டத்திலே எதுவுமே இல்லைன்னுதான் அறிவியல் சொல்லுது.”

“அட, கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருக்கேன், அதுக்குப் போயி இப்ப எதுக்கு அறிவியல் தத்துவமெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ற?”

“அப்படி வா வழிக்கு. தொடர்ந்து நான் தத்துவம் பேசறதுக்குள்ள உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிவிடு.

மனசுவிட்டு எதை வேணும்னாலும் பேசமுடியும்கிறதுக்காகத்தானே உன்கிட்ட வர்றதே...”

“சரி சரி, விசயத்துக்கு வா.”

“இனிமே யாரையும் டிபெண்ட் பண்ணியிருக்கக்கூடாது, இண்டிபெண்டன்ட்டா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன். அப்படி இண்டிபெண்டன்ட்டா இருக்குறதுதான் சரின்னு என் கூட இருக்கிறவங்களும் சொல்றாங்க.”

“அது சரியா தப்பான்னு அப்புறம் பார்க்கலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டியதிலைங்கிற முடிவுக்கு இப்ப நீ வர்றதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“பணத்துக்காகவோ, ஒரு மாரல் சப்போர்ட்டுக்காகவோ, வேற வாய்ப்புகளுக்காகவோ, சும்மா ஹேப்பியா இருக்குறதுக்காகவோ கூட யாரையாவது சார்ந்திருக்கிறப்ப, அவங்க நம்மை ஏதோ ஒரு வகையிலே இளக்காரமா பார்க்கிறாங்க. நமக்கே கூட ஒரு கான்ஃபிடன்ஸ் வர மாட்டேங்குது.”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லு.”

(என்ன நடந்தது, யார் என்ன பேசினார்கள் என்ற தகவல்கள் சொல்லப்படுகின்றன.)

“... இப்ப சொல்லு, நான் எடுத்த முடிவு சரிதானே?”

“அவங்க அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற அளவில் உன் வருத்தம் நியாயமானதுதான். ஒருவருக்கு ஒரு உதவியைச் செஞ்சிட்டு, அப்புறம் அதைச் சொல்லிக்காட்டுறதே அநாகரிகம், அதுக்காக இளக்காரமா பேசுறதோ அதை விடவும் அநாகரிகம். ஆனால் அவங்ககிட்டே வாதிடணும், யோசிக்க வைக்கணும். அவங்க மாறலைன்னா, நாம சார்ந்திருக்கிற இடத்தை, ஆட்களை மாத்திக்கிடலாம். நம்மகிட்ட தப்பு இருக்கும்னா நம்மையும் மாத்திக்கிடலாம். அதை விட்டுட்டு யாரையுமே சார்ந்திருக்க வேண்டியதில்லைன்னு முடிவெடுக்கிறது தவறு, அது சாத்தியமுமில்லை.”

“ஏன் சாத்தியமில்லை?”

“இப்ப நான் அறிவியல் தத்துவமாத்தான் பேச வேண்டியிருக்கு. உலகத்திலே எதுவுமே எதையுமே சார்ந்திருக்காமல் இல்லை. யாருமே யாரையுமே சார்ந்திருக்காமல் இல்லை. ஒன்றையொன்று சார்ந்திருக்காத முழு சுயம்புன்னு பேரண்டத்திலேயே எதுவும் கிடையாது.”

“ஏன், நான் சுயமா சம்பாதிக்கிறேன், சொந்தமா வீடு கட்டியோ வாடகை கொடுத்தோ குடியிருக்கிறேன்,  என் முயற்சியிலேயே எங்கே வேணும்னாலும் டிராவல் பண்றேன்னு வாழ முடியாதா?”

“நீ சொன்ன எதிலாவது முழுக்க முழுக்க சுயம், வேறு யாருமே சம்பந்தப்படாத சுயேச்சைன்னு இருக்கா? சொந்தமா வீடு கட்டுறதுன்னா மனை வாங்குவது, வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறுவது, கட்டி முடிப்பது, மின்சார இணைப்பு பெறுவது, குடிநீர்க் குழாய் பொருத்துவது, அதிலே நிற்காமல் தண்ணீர் வரவைப்பது, நாற்காலி கட்டில்னு போடுவது, பால் பாக்கெட் போட வைப்பது, சமையல் வாயு வரவழைப்பது... இப்படி எத்தனை விசயங்களில் எத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கு? வாடகை வீடுன்னா கூட வீட்டு உரிமையாளர் எப்படிப்பட்டவர்ங்கிறதைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கே! உன் சொந்தப் பணத்திலே பயணம் போகலாம், ஆனால் வாகன ஓட்டுநரையும் அவரது திறமையையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கா இல்லையா? எங்கே, யாரையுமே எதற்குமே சார்ந்திருக்காத நூறு சதவீத சுயேச்சையான வாழ்க்கைன்னு ஒரு எடுத்துக்காட்டு சொல்லு பார்க்கலாம்?”

“அது வேற, இது வேற இல்லையா?”

“இப்படி யாரையும் சார்ந்திருக்காம சுயேச்சையா - இண்டிபெண்டன்ட்டா - இருக்கணும்கிற மனநிலையை ஏற்படுத்துவதே இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்புதான் என்கிற வர்க்க அரசியலும் இதுக்குள்ளே இருக்கு தெரியுமா? மனிதர்களுக்குக் கூட்டுச் செயல்பாட்டுச் சிந்தனை வராமல், சுயேச்சையா இருப்பதிலே ஒரு மோகத்தை அல்லது நாட்டத்தை ஏற்படுத்திவிட்டால், சுரண்டப்படும் மக்கள் ஒன்றுபட மாட்டார்கள். அது சுரண்டல் மகா சக்திகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு! ஏற்கெனவே நாடுகளின் எல்லைக்கோடுகளாக, இன அடையாளங்களாக, மத நம்பிக்கைகளாக, சாதிப் பெருமைகளாகக் கூறுபோடப்பட்டிருக்கிறோம். இதிலே சுயம், சுயேச்சைன்னு தனித்தனி மனிதர்களாகவும் ஒதுங்கிக்கொள்ளலாமா?”

“இதிலேயும் அரசியலா?”

“எல்லாத்துக்கும் மேலே, மற்றவர்களைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலகுகிறாய் என்றால் மற்றவர்களும் உன்னைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலக்குகிறாய். அதற்குப் பெயர் சுயநலம் இல்லையா?”

“அது வந்து...”

“அது வந்துன்னு இழுக்கிறியே, இது போதும். நீ சிந்திக்கத் தொடங்குகிறாய்...”

1 comment:

vimalavidya said...

Depending others is not a SIN....WE need not give disturbance to others..we shall reduce dependence...if economical status is comfortable dependence will be reduced..life is dependable...loneliness. Is horrible..if men love others such mind set up will reduce...dependability depend on mind and money...some time Mis understanding among relationship will create this mentality...WE NEED ABHORENCE..PATIENCE....WE HAVE TO FORGET MANY THINGS....VIMALA VIDYA....