Wednesday 25 November 2015

மீண்டும் ஒலிக்க வேண்டிய கொகாலு

தமுஎகச விருதுபெற்ற நூல்கள் வரிசை: 9

தீர்க்கப்படாமல் இருந்த திருட்டு வழக்குகளில் “தேடப்பட்ட”
குற்றவாளிகளாக அடிக்கடி இவர்களின் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகப் போய்விடும். அதிகாரத் திமிரோடு ஆட்டம் போடுகிறவர்களின் காம நெருப்பில் இவர்களின் பெண்கள் பொசுங்குவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகக்கூட ஆகாமல் மறைக்கப்பட்டுவிடும். யார் இந்த “இவர்கள்”? முன்பு சமவெளிப் பகுதிகளிலிருந்து காடுசூழ் மலைப்பகுதிகளுக்கு விரட்டப்பட்ட, இப்போது அங்கிருந்தும் விரட்டப்படுகிற இருளர் மக்களே இவர்கள். இவர்களுக்காக இவர்களது மொழியிலேயே குரல் கொடுக்க வந்திருக்கிறது ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூல்.

கவிஞர் லட்சுமணன் ஏற்கெனவே இருளர் பேச்சு மொழியில் எழுதிய ‘ஒடியன்’ கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த நூல், இவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சொல்கிறது. தகவல்களைக் கோர்த்தளிப்பதாக இல்லாமல், இவர்களின் பாரம்பரியப் பாடல்களைக் கேட்கவைக்கிறது. அப்பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் தருகிறது. இதனால் நாமே அந்தப் பாடல்களினூடே பயணித்து இந்த மக்களைச் சென்றடைய முடிகிறது. புத்தகம் அத்தோடு நிற்கவில்லை, அந்தப் பாடல்களில் பொதிந்திருக்கும் கதைகளையும் கற்பனைகளையும் வெளிப்படுத்தி, உண்மையிலேயே வரலாற்றில் என்ன நடந்திருக்கும் என்ற அறிவியல்பூர்வ தேடலை மேற்கொள்கிறது. ஆய்வும், படைப்பாக்கமும் இணைந்த மாறுபட்டதொரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

“சப்பெ” என்றால் வாய்பேச இயலாத பெண். “கொகாலு” என்றால் முகவீணை அல்லது சின்னஞ்சிறு நாதசுரம் போன்ற இசைக்கருவி. வாய் பேச முடியாத சப்பெ உணர்வுகளைத் தேக்கி அந்தக் கொகாலுவை வாயில் வைத்து வாசித்தாளானால், இவர்களை விரட்ட வந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய ஆண் மறுநாள் செத்துப்போவான், அவர்கள் வளைத்துப்போட்ட நிலத்தில் வளர்ந்திருக்கும் பயிர்களை யானைக்கூட்டம் அழித்துவிடும்! இப்படியான பாமர நம்பிக்கைகளோடு இவர்கள் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்க, ஆக்கிரமிப்பாளர்களின் கட்டளைப்படி அந்த சப்பெ பலியிடப்படுகிறாள். அவளிடமிருந்து பறிக்கப்பட்ட கொகாலு கூரையில் வீசப்படுகிறது.

புத்தகம் நெடுகிலும் இப்படியான ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்ட வலிகள்  நெறிகட்டிப்போயிருப்பதைக் காண முடிகிறது. ஆதார ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்தப் பாடல்களும் வாய்மொழிக் கதைகளுமே இவர்களுக்கான அடையாளச் சங்கிலிகள். காலப்போக்கில் அந்தச் சங்கிலிகள் தேய்ந்து அறுந்து காணாமலே போய்விடக்கூடிய அபாயம் நேர்வதற்குள் எழுத்தில் பதிவு செய்திருப்பது ஒரு அருந்தொண்டு.

கொங்கு என்ற சொல்லுக்கு இருளர் மொழியில் கிழக்கு என்று பொருள். கொங்கர் என்றால் கிழக்கேயிருந்து வந்தவர்கள். குறிப்பிட்ட பிரிவினரையல்லாமல், வனத்திற்குள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் அல்லது கிழக்குத் திசை வழியாக வந்தவர்கள் எல்லோருமே இவர்களைப் பொறுத்தவரையில் கொங்கர்கள்தான். கானக உணவை மட்டுமே அறிந்தவர்களுக்கு, இட்லி கூட அரண்மனை உணவுதான். அந்த இட்லியையும் பிற பொருள்களையும் கொடுத்து இவர்களை மயக்கியிருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அதற்கெல்லாம் அசராதவர்களை வஞ்சகங்களாலும் வன்முறைகளாலும் அடக்கியிருக்கிறார்கள். இப்படி மயக்கியதற்கும் அடக்கியதற்கும் இரண்டு நோக்கங்கள்: ஒன்று, விலைமதிப்பில்லா மரங்களை வெட்டிக் கடத்துவது; இரண்டு, விலையேதும் தராமல் நிலங்களை வளைத்துப்போடுவது.

ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது இவர்களது இயற்கை உடைமைகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடையாளங்களும்தான். இயற்கை இவர்களது நேசத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியதாக இருந்துள்ளது. காட்டில் முதன் முதலில் தடம் பதித்து வாழ வழியேற்படுத்தியவர்களை சாமியாகப் போற்றிக் கதை புணைந்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒடுக்கப்பட்டதன் அடையாளமாகப் பின்னர் சிலை வடிவத் தெய்வங்களும், ஆதிக்க சமூக பூசைச் சடங்குகளும் புகுத்தப்படுகின்றன. “வானளவு எழுந்த பெருமாள்” பால் கேட்டபோது தயங்கிய காரையன் முதுகில் பிரம்படி விழுந்த கதையின் உள்ளடக்கம் இதுதான். “இந்தச் சாமியையெல்லாம் முந்தி சீந்த மாட்டாங்க்,” என்று ஒரு மூப்பன் சொல்வதிலிருந்து புலப்படுவதும் இதுவேதான்.

கதைப்பாடல்களில் எதிரொலிப்பது வேதனைகள் மட்டுமல்ல; அவ்வப்போது நிலைநாட்டப்பட்ட வெற்றிகளும்தான். அடிமைப்படுத்த முயன்றவர்களை மீறி, நிலத்தில் சாகுபடி செய்ய முன்னத்தி ஏராக மாறிய வள்ளியின்  வெற்றி அப்படிப்பட்ட ஒன்றுதான். விரட்ட வந்தவர்களை விரட்டியடித்த போராட்டங்களில் இவர்களுக்கு வன விலங்குகளும் அல்லவா துணையாக நின்றிருக்கின்றன! அந்தக் கதைகளில்தான் எத்தனை நையாண்டி! எத்தனை எள்ளல்!

இவர்களும் மலை வனத்திற்குள் சமவெளியிலிருந்து ஏறி வந்தவர்கள்தான், மற்றவர்களும் அப்படி வந்தவர்கள்தான். வேறுபாடு என்னவென்றால், இருளர்கள் இயற்கையோடு இணைந்து வாழத் தொடங்கினார்கள். மற்றவர்களோ இயற்கையைச் சுரண்டவே வந்தார்கள். இன்று கொங்கர்கள் மட்டுமல்ல, மேற்குலக கார்ப்பரேட் கடவுள்களுமல்லவா வளைத்துப்போட வருகிறார்கள்! அன்று இட்லி ஆசை காட்டப்பட்டதென்றால், இன்று கைப்பேசி உள்ளிட்ட நவீனப் பொருள்களின் வலை! வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக வைத்து, நிலம் கைப்பற்றல் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் அரசின் வளர்ச்சி மந்திரங்களில் மறைந்திருப்பது இவர்களை இங்கிருந்தும் விரட்டுகிற தந்திரங்களுமல்லவா!

அச்சமறியாத இந்த மக்கள் நடுங்குவது பீ-ஒடியன் பற்றிய நினைப்பில்தான். இவர்களை அழிக்கவந்த தீய சக்தியாக அதனைக் கருதுகிறார்கள். விசாரித்தால் தொடக்கத்தில் இவர்களது முன்னோர்களை வதைத்த கொடுமைக்காரர்களின் கதைகள் கிடைக்கக்கூடும்.

ஒரு சமுதாயம் உண்மையிலேயே நாகரிகத்துடன் இருப்பதாக எப்போது சொல்ல முடியும் என்றால், மிகக்குறுகிய எண்ணிக்கை கொண்டவர்களின் உரிமைகளும் அடையாளங்களும் சமத்துவத்தோடு மதிக்கப்படுகிறபோதுதான். இருளர் சமூகத்தை இருட்டில் தள்ளத் துடிக்கும் நவீன பீ-ஒடியன்கள் வீழ்த்தப்பட வேண்டும். கூரையில் வீசப்பட்ட கொகாலு மீண்டும் கையில் எடுக்கப்பட வேண்டும், சப்பெ என அடக்கப்பட்டவர்களின் உரிமை முழக்கமாக உரக்க எழுந்து சக மனிதர்களை அணிதிரட்ட வேண்டும்.

(‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,’ வெளியிட்டுள்ள, லட்சுமணன் எழுதிய ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2014ம் ஆண்டுக்கான விளிம்பு நிலை மக்களுக்கான எழுத்தாக்கத்திற்கான விருதினை வழங்கியுள்ளது.)

விருது வழங்கல் விழா தஞ்சையில் நடைபெற்றபோது இப்புத்தகம் தேர்வு செய்யப்பட்டது குறித்து நான் உரையாற்றினேன். அதன் அடிப்பiடையில் எனது இந்தக் கட்டுரை  ‘தீக்கதிர்’ (நவம்பர் 23, 2015 இதழ்) நாளேட்டின் ‘இலக்கியச் சோலை’ பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Sunday 8 November 2015

வெள்ளத்திற்கு மேலே தலை தூக்குவோம்

மும்பையைச் சேர்ந்த உருது மொழி எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ் . நாடு முழுவதும் சகிப்பின்மை ஊட்டப்படுவதற்கும் கருத்துரிமை தாக்கப்படுவதற்கும் தங்களது எதிர்ப்பின் அடையாளமாக சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக்கொடுத்த படைப்பாளிகளில் ஒருவர். தனது முதல் நாவலுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். பண்பாட்டுத் தளத்தில் அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிரான விரிந்த மேடையாகிய ‘சரிநிகர்’ அமைப்பின் சார்பில் அக்.29 அன்று சென்னையில் நடைபெற்ற சென்னைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் ‘தீக்கதிர்’ நாளேட்டின் ‘வண்ணக்கதிர்’ இணைப்பிதழுக்கு (நவம்பர் 8 - 2015) அளித்த சிறப்பு நேர்காணல் இது. தீக்கதிர்-வண்ணக்கதிர் சார்பில் சந்திப்பு: ச. தமிழ்ச்செல்வன், அ. குமரேசன்,
உங்களது தொடக்க வாழ்வு, இலக்கிய உலகத்திற்குள் நீங்கள் ஈர்க்கப்பட்ட பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...
மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நான் பிறந்தேன். என் தந்தை மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் எனக்கு நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது எங்கள் குடும்பம் அங்கே சென்று குடியேறியது. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு எல்லாமும் மும்பையில்தான். உருது இலக்கியத்திலும் பின்னர் ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். பள்ளி மாணவனாக உரக்க வாசிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது, இலக்கிய வாசிப்பை நான் மிகவும் நேசிக்கத் தொடங்கினேன். இலக்கியம் வாசிக்க வாசிக்க, அதன் வழியாக மனித நேயக் கண்ணோட்டம், மதக் கண்ணோட்டத்தைவிட, வேறு எதையும் விட மகத்தாது என்ற புரிதல் ஏற்பட்டது.
நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோதுதான் 1992ம் ஆண்டின் வன்முறைகளும், 1993ம் ஆண்டின் குண்டுவெடிப்புகளும் மும்பையைக் குலுக்கின. அதைத் தொடர்ந்து ஒரு முஸ்லிம்களிடையே தங்களுடைய அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது பற்றிய அச்சம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டு நடமாடுகிறவர்களை அச்சத்தோடு பார்க்கிற சூழலும் ஏற்பட்டது. முஸ்லிம் இளைஞர்களிடையே இது தொடர்பாக ஏற்பட்ட மன ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எனது முதல் நாவலை எழுதினேன். ஒரு பக்கம் அதற்கு விரிவான வரவேற்பும் இருந்தது, முஸ்லிம் சமூகத்தில் ஒரு பகுதியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. அந்த எதிர்ப்பு எனக்கு ஒரு எழுத்தாளரின் இடம் எது, சந்திக்கும் சவால்கள் என்ன என்ற தெளிவை ஏற்படுத்தியது. இலக்கியப் படைப்பின் அழகியல் என்பது மனித நேயத்திற்கான அழகியலாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். அதன் பிறகு, மதத்திற்கோ வேறு எதற்குமே அஞ்சாமல் எழுதுவது என்ற உறுதியை வளர்த்துக்கொண்டேன்.
அழகியலைப் பொறுத்தவரையில் மதவாதிகளுக்கும் கலை-இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இடையே எப்போதுமே ஒரு முரண் இருந்துவந்திருக்கிறது. மதவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மத வாதம் சார்ந்த அழகியலைத்தான் வலியுறுத்துகிறார்கள். எழுத்தாளர்களோ மனித நேயம் சார்ந்த அழகியலை உயர்த்திப்பிடிக்கிறார்கள். ஒரு எழுத்தாளராக எனது பங்கு என்ன என்பது எனக்குத் தெரிகிறது. மதவாதிகள் பற்றிய அச்சமின்றி, எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினரின் ஏற்புக்காக அல்லாமல், வெவ்வேறு பிரிவுகளையும், வெவ்வேறு மொழிகளையும் சார்ந்த வாசகர்களுக்காக எழுதுவது என்ற உறுதியான முடிவெடுத்தேன்.
சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக்கொடுக்க உங்களைத் தூண்டியது எது?
பல காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக, நாடு முழுவதும் பகைமை நெருப்பு பற்றவைக்கப்படுகிறபோது, மத நம்பிக்கையின் பெயரால் அராஜகங்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்படுகிறபோது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருக்கிற பிரதமர். தனது சொந்த மாநிலத்தில் அந்தப் பகைமை அரசியல் வளர்க்கப்பட்ட வரலாற்றுக் கறையோடு வந்தவர்தான் அவர். இரண்டாவதாக, மக்களின் மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. உணவு உரிமை கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை நிறுத்துவதற்கான அரசியலாக்கப்படுகிறது. மூன்றாவதாக, சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதற்கான உரிமையும் சுதந்திரமும் ஒடுக்கப்படுகின்றன. கல்புர்கி கொலையின் உள்ளர்த்தம், சிந்தனைக்கு எதிரான வன்கொடுமைதான்.
இந்தப் பின்னணியில்தான் சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக கல்புர்கியின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விருதைத் திருப்பிக்கொடுப்பதாக அறிவித்தார்கள். அனைத்து எழுத்தாளர்களுக்குமான சாகித்ய அகடமி மௌமனாக இருப்பதைக் கண்டித்தும், திட்டவட்டமாக, மத்திய அரசைக் கட்டாயப்படுத்துகிற வகையில் அகடமி செயல்பட வலியுறுத்தியும் இவ்வாறு விருதைத் திருப்பிக்கொடுக்க முன்வந்தார்கள். நானும் இந்த முடிவை எடுத்தேன். இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பானதல்ல; அண்மைக்காலமாக நாடு முழுவதுமே திட்டமிட்ட வகையில், பல்வேறு அமைப்புகள் மூலமாக, பல்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிற பண்பாட்டுத் தாக்குதல்கள், கருத்துரிமை அடக்குமுறைகள், மக்கள் நல்லிணக்க வாழ்வைச் சீர்குலைக்கும் செயல்கள் அதிகரித்து வருவதற்கு எதிரான வெளிப்பாடுதான் இது. இந்த எதிர்ப்பு இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன், தாக்குதல்கள் பல வடிவங்களில் இருப்பது போல எதிர்ப்புகளும் பல வடிவங்களில் இருக்கலாம். தமிழகத்திலும் சில எழுத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது உட்பட, நாட்டின் பல பகுதிகளிலும் பல தரப்புகளையும் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
2004ல் வெளிவந்த உங்களுடைய முதல் நாவல் ‘நகாலிஸ்தான் கி தலாஷ்’ - ‘பாலைவனச் சோலையைத் தேடி’- நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். எந்தப் புகாரின் அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? அப்போது உங்களுடைய உணர்வு எப்படி இருந்தது? அந்த நாவல் ஒரு வகையில் உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
அந்த நாவல் காதலைப் பேசுகிறது, காதலுக்காகப் பேசுகிறது. அதுதான் நடவடிக்கைக்குக் காரணம்! அந்த நாவலை எதிர்த்தவர்கள் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
உருது பேசுகிற பிரிவினரில் பலர் அந்த மொழி இலக்கியத்தைத் தாண்டி நவீன இலக்கியத்தின் பக்கமே வராதவர்களாக இருக்கிறார்கள். மதம் சார்ந்த உருது இலக்கியத்தில் காதலுக்கு இடமில்லை. காதல் வயப்பட்ட ஒரு ஆண் தனது காதலியைப் பற்றிய கற்பனையோடு வெளிப்படுத்தும் உணர்வுகள், அதே போல் காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் காதலனைப் பற்றி யோசிக்கிறபோது சித்தரிக்கும் உணர்வுகள் மற்ற மொழி இலக்கியங்களில் பரவலாக இருக்கின்றன. அந்த வாடையே அறியாத சிலர், அந்தச் சித்தரிப்புகளை ஆபாசம் என்றும், மார்க்கத்திற்கு எதிரானது என்றும் தாக்கினார்கள். அதையே புகாராகவும் பதிவு செய்தார்கள். நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
எனக்கு ஏற்பட்ட உணர்வு - எந்த மதமானாலும் காதலை அங்கீகரிக்க மறுக்கிறதே என்பதுதான். பல்வேறு ஆர்எஸ்எஸ் குடையின் கீழ் ராம் சேனா போன்ற இந்து மதவாத அமைப்புகள், காதலை எதிர்க்கின்றன. காதலர்களாகத் தெருவில் செல்ல அனுமதிப்பதில்லை. காதல், பாலியல் பிரச்சனைகள் போன்ற கருப்பொருள்களை ஆபாசம் என்றும், ஒரு பகுதி மக்களைப் புண்படுத்துகின்றன என்றும் கூறுகின்றன. பாலியல் உணர்வுகள் இயற்கையானவை, அதை வெளிப்படுத்துவதும் இயற்கையானது, இலக்கியத்தில் அதைச் சித்தரிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை ஏற்க மறுக்கின்றன. அதே போன்றுதான் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களும் காதலை ஏற்க மறுத்து, காதல் உணர்வுகளை ஆபாசம் என்று தாக்குகின்றன. அடிப்படையில், மதம், சாதி என்ற வேலிகளை உடைக்கக் கூடியது காதல்... அதுதான் அவர்களது ஆத்திரத்திற்குக் காரணம். இதில் மத வேறுபாடே இல்லை!
என்னைப் பொறுத்தவரையில் அந்த நடவடிக்கைக்குப் பிறகு எனது கண்ணோட்டங்கள் மேலும் உறுதிப்பட்டன. 2009ல் ‘மாம்னுவா முஹபத் கி கஹானி’ (தடைசெய்யப்பட்ட காதலின் கதை), 2011ல் ‘குதா கே சாயே மேய்ன் ஆங்க் மிச்சோலி’ (கடவுளின் பெயரால் கண்ணாமூச்சி ஆட்டம்) ஆகிய நாவல்களை எழுதினேன்.
சிறுவயதில் நான், சில இஸ்லாமிய மதவாத இளைஞர் அமைப்புகளின பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். முஸ்லிம் மார்க்கம், முஸ்லிம் சகோதரத்துவம் என்ற பெயர்களில் அநதப் பிரச்சாரங்கள் நடந்தன. காஷ்மீர் பிரச்சனையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மத அடையாளங்களைக் காக்கிற லட்சியமே உயர்வானது என்று நம்பியிருந்தேன். அது போலியான அடையாளம் எனபதும் அவர்களுடைய உண்மையான செயல்திட்டம் அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்து நாடு என்பது போலவே இஸ்லாமிய நாடு என்ற நோக்கம் கூட சில அமைப்புகளுக்கு இருந்தது. பின்னர், ஏற்கெனவே சொன்னது போல, நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிக்கப்படிக்க எனது சிந்தனைகள் மாறின. பிரேம்சந்த், மாக்சிம் கார்க்கி, செகாவ், மன்ட்டோ உள்பட பலரது எழுத்தாக்கங்களைப் படித்தேன். அந்த எழுத்துகள்தான் எனக்கு, மதத்தை விடவும் மனிதம் உயர்வானது என்று எனக்கு உணர்த்தின. அன்புக்காக, அமைதிக்காக, நல்லிணக்கத்திற்காக, நட்புறவுகளுக்காக, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதே இலக்கியம். ஆக, பிற்போக்குச் சிந்தனைகளின் அழுக்கான ஆழத்தில் புதைந்துவிடாமல் என்னைக் காப்பாற்றியது இலக்கியம்தான்.
அதிலிருந்து விடுபட்டபிறகு, இந்து மதவாத அமைப்புகளுக்கும் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் புரிந்துகொண்டேன். மதம் என்ற அடிப்படையில் மனித உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் தடைபோடுவதில் இந்த இரு பிரிவினரும் சகோதர சகோதரிகளாகத்தான் இருக்கிறார்கள். மதவெறி அமைப்புகள்எல்லாமே பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை, கலைகளை ஏற்பதில்லை, காதலை ஏற்பதில்லை, இலக்கியத்தின் மூலம் மதம் விமர்சிக்கப்படுவதை ஏற்பதில்லை... ஆகவே இவர்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவர்கள்.
தொலைக்காட்சி விவாதங்களிலும் பொது நிகழ்வுகளிலும் மாற்றுச் சிந்தனைகளுக்காகவும் கருத்துரிமைக்காகவும் பண்பாட்டுப் பன்மைத்துவத்துக்காகவும் வாதிடக்கூடிய கம்யூனிஸ்ட்டுகள், பகுத்தறிவாளர்கள், இதர முற்போக்காளர்கள் இந்து மதத்தைத்தான் விமர்சிக்கிறார்கள், முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ மதவாதம் பற்றி எதுவும் சொல்வதில்லை என்று இந்துத்துவவாதிகள் குற்றம் சாட்டுவதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கிற எளிய இந்து மக்கள் இந்தக் குற்றச்சாட்டு நியாயம்தான் என்று நினைக்கும் வகையில் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள். உங்கள் கருத்து என்ன?
முஸ்லிம், கிறிஸ்துவ மதவாத சக்திகள் இங்கே செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்களையும் விமர்சிக்கத்தான் வேண்டும். அவ்வாறு விமர்சிப்பது நடக்கத்தான் செய்கிறத.
ஆனால், அவர்கள் சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இங்கே இல்லை. பெரிய அச்சுறுத்தல் என்பது பெரும்பான்மை மதவாத அமைப்புகளிடமிருந்துதான் வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான அமைப்புகள்தான் அவை. இந்து மதத்தின் பன்முகத் தன்மைக்கே இந்த அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்து மதத்திற்குள் உள்ள மாறுபட்ட சமூகங்களின் மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்கும் அவர்களால் ஆபத்துதான். ஆகவே இங்கேயுள்ள முற்போக்காளர்களும் ஜனநாயக சக்திகளும் இந்துமதவாத அமைப்புகளின் வெறித்தனமான செயல்களைக் கூடுதலாகக் கண்டித்தாக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய நாடுகளில் இருக்கிற கம்யூனிஸ்ட்டுகளும் ஜனநாயக சக்திகளும் அந்த நாடுகளின் பெரும்பான்மை மதவாதிகளாகிய முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் சீர்திருத்தங்களுக்காகவும் போராடுகிறார்கள். கிறிஸ்துவ நாடுகளில் முற்போக்காளர்கள் கிறிஸ்துவ மதவெறி அமைப்புகளைக் கண்டித்துக் குரல் கொடுக்கிறார்கள். வேறு எந்த மதம் ஆளுமை செலுத்துகிற நாடானாலும் அங்கேயும், அந்த மதம் சார்ந்த வெறிச்செயல்களை, அங்கே மனிதஉரிமைகளுக்காகப் போராபடுகிறவர்கள் எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே போல் இந்தியாவில் இந்து மதத்தின் பெயரால் கிளப்பிவிடப்படும் பாகுபாடுகளுக்கு இங்குள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பானதுதான்.
எந்தவொரு சமூக சீர்திருத்த இயக்கமும் அந்தந்த சமூகத்திற்கு உள்ளிருந்தே வருகிறபோதுதான் வலுப்பெற முடியும், வெற்றி பெறவும் முடியும். இஸ்லாம் சமயத்திற்குள் அப்படிப்பட்ட சீர்திருத்தக்குரல்கள் எந்த அளவுக்கு ஒலிக்கின்றன?
கெடுவாய்ப்பாக அப்படிப்பட்ட குரல்கள் சன்னமாகவே ஒலிக்கின்றன. சீர்திருத்தங்களுக்கான தேவைகள் இருக்கின்றன என்ற போதிலும், அதற்கான முயற்சிகளுக்கு ஊக்கம் கிடைப்பதில்லை. மாறாக, பழமைவாதங்களை நியாயப்படுத்தி, அவற்றைக் கெட்டிப்படுத்துவதில்தான் பலரும் இறங்குகிறார்கள். இளைஞர்களும் அந்த வாதங்களால் கவரப்படுகிறார்கள் என்பது இன்னொரு கெடுவாய்ப்பு. அதன் பின்னணியில் மதத்தலைவர்கள், போதகர்களின் பழமைவாதக் கண்ணோட்டங்கள் மட்டுமல்ல.
மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளின் கைகள் மேலோங்கியிருப்பதைப் பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் அந்த சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்க அரசும் பல ஐரோப்பிய அரசுகளும் இராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அத்துமீறிச் செயல்பட்டதற்கும், லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்ததற்கும் எதிராகக் கிளம்பிய பல அமைப்புகள், மனித உரிமைகளுக்காகவோ சமத்துவத்திற்காகவோ ஜனநாயகத்திற்காகவோ போராடாமல் மதவாதத்தை நிலைநாட்டவே முயல்கின்றன. எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள மதமே வழி என்று போதிக்கின்றன. அதை நிலைநாட்ட ஜனநாயகத்தை ஒடுக்கவும் துணிகின்றன. ஐஎஸ், முஸ்லிம் சகோதரத்துவம், தாலிபான் என்று பல இயக்கங்கள் இப்படித்தான்...
அந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவருகிறவர்களும், இங்கிருந்து அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்கிறவர்களும் அதே போன்ற கருத்தாக்கங்களை இங்கே பின்பற்றுகிறார்கள். அவர்களோடு உரையாடல் நடத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ள மதவாத அணுகுமுறை தேவையில்லை, மத்திய கிழக்கு நாடுகளில் கையாளப்படும் அணுகுமுறைகள் இங்கே பொருந்தாது என்று எடுத்துரைக்க வேண்டியுள்ளது. சீர்திருத்தங்களுக்கான முயற்சிகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூக சீர்திருத்தம் என்று வருகிறபோது நாம் பெண்ணுரிமை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களுடன் விவாதிக்கிறபோது, இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்து மதத்தில் பெண் கடவுள்களே கூட இருப்பதாக இந்துமதத்திற்காக வாதிடுவோர் கூறுவது போன்று இவர்களும், இஸ்லாம் சமயத்தில் பெண்களுக்கு சமத்துவம் இருக்கிறது என்கிறார்கள். உண்மை என்ன?
பிரச்சனை இஸ்லாம் நெறிகளில் இல்லை, அவற்றை விளக்கியவர்களிடம்தான் இருக்கிறது. நபிகள் நாயகம் சொன்ன இஸ்லாமிய நெறிகளில் உண்மையிலேயே பெண்களுக்கு சமத்துவமும், முழு உரிமைகளும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கு விளக்கம் அளித்த முல்லாக்களும் மற்றவர்களும் தவறான கருத்துகளைக் கூறி பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கெட்டிப்படுத்திவிட்டார்கள். பெண்களின் சுதந்திரத்தை முடக்கிவிட்டார்கள். இந்தியாவில், முஸ்லிம் பெண்கள் பொதுவெளிக்கு வருவதும் பங்கேற்பதும் நடக்கிறது என்றாலும் ஒப்பீட்டளவில் மிகக்குறைவுதான். அடிப்படையான பெண்ணுரிமைகள் மறுக்கப்படுகின்றன, வெளியேயிருந்து வரும் தாக்குதல்களைக் காரணம் காட்டி அந்த உரிமைகள் மேலும் முடக்கப்படுகின்றன.
இதற்கு எதிரான போராட்டத்தில், அடிப்படையான நெறிகள் வலுவாக முன்வைக்கலாம். முரண்பட்டு மோதிக்கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை நடத்துவது, கேள்விகள் கேட்பது என்று பாலின சமத்துவக் கருத்துகளை வலியுறுத்தலாம்.
எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் அறிவியலாளர்கள் கலைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய விருதுகளைத் திருப்பிக்கொடுப்பதாக அறிவித்தார்கள். அதன் தாக்கம் என்ன?
இன்று நீங்களும் நானும் சகிப்புத்தன்மை பற்றி விவாதிக்கிறோமே அதுவே ஒரு தாக்கம்தான். நாடு முழுவதும் சகிப்பின்மை பற்றிய வாத-எதிர்வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் ஆட்சியாளர்களும் மதவாத சக்திகளும் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமே இந்தியாவில் என்ன நடக்கிறது என்று திரும்பிப்பார்க்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒதுங்கியிருந்தவர்கள், பொதுமக்களின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்கள் தொடங்கிவைத்த செயல் நாடு தழுவிய விவாதப்பொருளாகியிருக்கிறது. இதெல்லாம் முக்கியமான தாக்கங்கள்.
இந்தியா அடிப்படையில் விவாதங்களில் நம்பிக்கை உள்ள நாடுதான். தொன்மைக்காலத்திலிருந்து சமயம், சமூகம், அரசியல் என்று நெடும் விவாதங்கள் நடந்த வரலாறுகள் இருக்கின்றன. அந்த விவாத மரபும், உரிமையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை அனுமதிக்கலாமா என்ற கேள்வி சமுதாய வெளியில் நிச்சயமாகப் பரவும். அந்த மரபையும் உரிமையையும் மக்கள் உறுதியாகப் பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்டோர் விருதுகளைத் திருப்பிக் கொடுக்க முன்வந்தார்கள். சக படைப்பாளிகள் கருத்துரிமைக்காக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழக எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதைத் தொடர்ந்து உருது எழுத்தாளர்களும் அதே போன்ற வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார்கள். இந்தச் செயல்களில் உள்ள செய்தி இதுதான்: பிரதமர் அவர்களே, நாங்கள் உங்களை எதிர்த்து இதைச் செய்யவில்லை, நாடு முழுவதும் பரப்பப்படுகிற பகைமை அரசியலை எதிர்க்கிறோம்.
இந்த முயற்சிகளுக்குப் பிறகு சாகித்ய அகடமியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. அதுவே தாமதம்தான் என்றாலும், எழுத்தாளர்களது இயக்கத்தால்தான் அந்தக் கூட்டம் நடந்தது. எழுத்தாளர்களின் இயக்கம் என்றே அதைச் சொல்லலாம். அதே வேளையில், இந்தச் செயல்களின் இலக்கு சாகித்ய அகடமியின் மௌனத்தைக் கலைப்பது மட்டுமல்ல. மத்திய அரசின் மௌனத்தை உடைக்க வேண்டும் என்பதும்தான். ஆளுங்கட்சியினர் பல வகைகளில் பகைமைக் கருத்துகளைப் பேசுகிறார்கள், அவர்களுடைய கூட்டாளிக் கட்சியொன்று பாகிஸ்தான் பாடகர் நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது... மாட்டுக்கறி வைத்திருந்தாக வதந்தி பரப்பப்பட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது... இதிலெல்லாம் அரசின் நிலைபாடு என்ன என்று கேட்பதுதான் இந்தச் செயல்களின் நோக்கம். இதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க ஆளுங்கட்சியினர் முயன்றதையும் மீறி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
அரசு திட்டவட்டமாக மதவெறிப் பிரச்சாரங்களுக்கும், பயங்கரத் தாக்குதல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கிறது என்று தெரியவருகிறபோது, மூத்த எழுத்தாளர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பார்கள். அது வரையில், சாகித்ய அகடமி தீர்மானத்தை ஏற்று விருதுகளை மீண்டும் ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது அரசியல் தூண்டுதலால்தான் என்று ஆளுங்கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம் தேசத்தை அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் இருவரும் கூறியிருக்கிறார்கள்...
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தவர்களின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்றெல்லாம் சொல்வதன் மூலம் இந்த எதிர்ப்பைக் கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். பிரச்சனைகளைத் திசை திருப்புவதில் வல்லவர் அருண் ஜேட்லி. ஆனால் இந்த முறை அது நடக்காது. ஏனென்றால் எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், திரைக்கலைஞர்கள், ஒரு முன்னாள் கப்பற்படை அதிகாரி ஆகியோர் விருதுகளைத் திருப்பியளித்தது இந்த தேசத்தை எதிர்த்து அல்ல. பகைமைப் பேச்சுகளையும், மதவெளித் தாக்குதல்களையும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் இந்த அரசு தடுக்கத் தவறிவிட்டதை எதிர்த்துதான். மக்கள் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். முன்பு காங்கிரஸ் அரசு செய்தது போலவே நீங்களும் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள் என்று வலியுறுத்துவதுதான் நோக்கம்.
இசைக்கலைஞர் ஏ.ஆர். ரகுமான் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த ரஜா அகடமி என்ற முஸ்லிம் அமைப்பு அவருக்கு எதிராக ஃபட்வா அறிவித்தது பற்றி...
ராம் சேனா போல இந்த ரஜா அகடமியும் ஒரு சிறிய அமைப்புதான், ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப்பு அல்ல. அதன் ஃபட்வா அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏற்கெனவே டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடை பற்றி விமர்சித்து அவருக்கு எதிராகவும் ஃபட்வா அறிவித்த அமைப்புதான் அது.
கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பின்மை மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாகத்தான் இப்படிப்பட்ட கும்பல்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறேன். அரசுகளின் சமரசம், திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது போன்ற பலவீனங்களால்தான் இப்படிப்பட்ட குழுக்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.
பொதுவாகவே இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் மக்களின் ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் பயன்படுத்திக்கொண்டு மதவாத சக்திகள் உள்ளிட்ட வலதுசாரி சக்திகள் செல்வாக்குப் பெற்றிறிருக்கின்றன. இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?
உண்மைதான். இது திடீர் நிகழ்ச்சிப்போக்கு அல்ல. அன்றைய சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய அரசுகளுக்கும் இடையயான சித்தாந்தப் போர் இதன் பின்னணியில் இருக்கிறது. சோவியத் யூனியனுக்கு எதிராக, பல நாடுகளில், அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களையே வைத்து ஒரு ஏவல் போர் நடத்தியது அமெரிக்க அரசு. சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு, அந்த ஏவல் படைகள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பயன்படுத்தி அரசியல் சக்திகளாக உருவெடுத்தன. சில அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிராகவும் மாறின. இத்தகைய பின்னணியில்தான் பல நாடுகளிலும் அப்பட்டமான இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளிட்ட மதவாத அமைப்புகள் ஆளுமை செலுத்துகின்றன. மிக விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாறு இது.
இந்தப் போக்கின் இந்தியப் பதிப்பாக, இந்து மதவாத அரசியல் முன்னுக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம். மதங்கள் வேறு என்றாலும், மக்களின் அடிப்படை உரிமைகளை, கருத்துச் சுதந்திரத்தை, மதச்சார்பற்ற மாண்புகளை, ஜனநாயகத்தைத் தாக்குவதில் இவர்கள் எல்லோருமே ஒரே வார்ப்புகள்தான்.
இதை கலை இலக்கியக் களத்தில் எப்படி எதிர்கொள்வது? எழுத்தாளர்கள் கலைஞர்களின் பங்கு என்ன?
கலை இலக்கியக் களத்தில்தான் முதல் முன்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுகிலும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பியதில் கலையும் இலக்கியமும் முன்னணிப்பங்கு வகித்து வந்திருப்பதைப் பார்க்க முடியும். அந்தப் போராட்டம் உடனடியாக, ஒரே முயற்சியில் வெற்றிபெற்றதில்லைதான். ஆனால், படிப்படியாக மாற்றங்களை நிலைநாட்ட முடிந்திருக்கிறது. இன்றும் தீண்டாமை இருக்கிறது, அதே வேளையில் முன்பு இருந்தது போல், எந்தப் பொதுக் குளத்திலோ அல்லது ஆற்றிலோ தலித் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்ற நிலைமை இப்போது இல்லை. பெண்ணுரிமை, ஜனநாயக உரிமைகள் என அனைத்திலும் இந்த மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிகழ்ந்துள்ளன, இன்னும் செல்ல வேண்டிய தொலைவும் நீண்டிருக்கிறது.
தற்போது மதவெறி சக்திகளின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதில் கலை இலக்கியக் களம் ஒரு சுவராக உயர்ந்தெழ வேண்டும். மதவாத சாதிய அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு, பாலினப் பாகுபாடுகள் ஒதுக்கித்தள்ளப்பட்டு, சகிப்புத்தன்மையின் அடையாளம், ஜனநாயக அடையாளம், நல்லிணக்க அடையாளம், சமத்துவ அடையாளம், பன்முகப் பண்பாட்டு அடையாளம், அமைதியின் அடையாளம் நிலைநாட்டப்படும் நாள் வர வேண்டும். அந்த நாள் உடனே வந்துவிடாது. பழமைவாதம் ஒரு வெள்ளம் போல் நம்மை மூழ்கடிக்கப் பாயும். அந்த வெள்ள மட்டத்திற்கு மேலே தலையை உயர்த்துவதே மக்கள் கலைஞர்கள், இலக்கியவாதிகளின் கடமை. போர் இல்லாத, சாதி இல்லாத, மதம் இல்லாத, பாகுபாடுகள் இல்லாத உலகம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
படங்கள்: செ. கவாஸ்கர்

Monday 31 August 2015

முதுகு என்று இருக்கும் வரை...

உளமாடும் உரையாடல்: 2


(ஏற்கெனவே சொல்லியிருப்பது போல இது நெடுங்கால தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து எடுத்துக்கொண்டு பகிர்ந்துகொள்கிற பொதுச்சிந்தனைதான். அப்படியாக இருக்குமோ இப்படியாக இருக்குமோ என்ற குடைச்சல்களைத் தள்ளிவிட்டுப் படியுங்கள்.)



“வந்ததிலேயிருந்து பார்க்கிறேன், மவுனமா இருக்கிற. எனக்கு கவலையா இருக்கு...”

“முதுகுக்குப் பின்னால சிரிக்கிறவங்களைப் பத்தி பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன்.”

“முதுகுக்குப் பின்னால சிரிக்கிறதை நாம பார்க்க முடியாது. உனக்கு எப்படித் தெரிஞ்சுது?”

“அவங்க பேசுனது என் காதுக்கு வந்துச்சு.”

“உன் நல்லதுக்காகத்தான் பேசியிருப்பாங்க.”

“கெடுதல் செய்யணும்கிறதுக்காகவே ஏதாவது செய்றவங்களை விட, நல்லது செய்றதா நினைச்சுக்கிட்டு ஏதாவது செய்றவங்களால ஏற்படுற கெடுதல்தான் நிறைய வலியைத் தருது.”

“சமூகமே அப்படித்தான் இருக்கு. அதிலே இவங்களும் ஒரு பார்ட்...”

“முகம் பார்த்துப் பேசுறப்ப அந்த சமூகத்தைத்தான் இழுத்துக்கிடுறாங்க. ‘நீங்க முற்போக்கானவங்களா இருக்கலாம், ஆனா சமூகம் இன்னும் மாறலை. அதுக்கேத்த மாதிரி நீங்கதான் அனுசரிச்சுக்கிட்டு நடக்கணும்,’னு அறிவுரை சொல்றாங்க.”

“பொதுவா இது எல்லாரும் சொல்றதுதானே?”

“பொதுப்புத்தியை மாத்த வேணாமா? சமூக மாற்றத்துக்காகத் தங்களை ஒப்படைச்சுக்கிட்டவங்க, மாறாத சமூகத்தை மாத்துறதுக்கு முயற்சி பண்றதுக்கு பதிலா, சமூகம் மாறலை, அதனால நீ அனுசரிச்சுப் போன்னு சொல்றாங்க. சமூகம் எந்தெந்த விசயத்திலே எப்படியெப்படி இருக்கோ, அந்தந்த விசயத்திலே அப்படியப்படியே வைச்சிருக்கப் பார்க்கிறாங்க.    இதையெல்லாம் என்னால தாங்க முடியலை. தோத்துக்கிட்டிருக்கிறமோன்னு சோர்வா இருக்கு.”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லாம கருத்தாக மட்டும் சொல்ற... அதுவும் நல்லதுதான்.  சாதி, மதம், சடங்கு, உறவுன்னு எல்லாத்திலேயும இப்படித்தான் குழப்புறாங்க. சமூகப்புத்தியை மாத்துறது வெறுமனே பேசுறதால மட்டுமில்லை, முடிஞ்ச அளவுக்கு வாழ்க்கையிலேயும் கடைப்பிடிச்சாத்தான் நடக்கும். அப்படி முயற்சி பண்றவங்க மேல சகதியடிக்கிறதும் நடக்கும். இதெல்லாம் உனக்குத் தெரியாததில்லையே...”

“தெரியும்தான்... ஆனாலும்...”

“உண்மையான பிரச்சனை அது இல்லை. உனக்கு வயசாயிடுச்சுன்னு நீ நினைக்க ஆரம்பிச்சுட்ட...”

“ம்...?”

“ஆமா, முந்தி நான் இதே மாதிரி ஒரு மனநிலையோட இருந்தப்ப எனக்குத் தெம்பூட்டிச் செயல்பட வைச்சதே நீதான். முதுகுக்குப் பின்னால சிரிக்கிறவங்களைப் பத்தி அலட்டிக்காம போய்க்கிட்டே இருந்த ஆளாச்சே... சரியானதுன்னு நினைக்கிறதைச் செய்துக்கிட்டே இருந்த ஆளாச்சே... சரியில்லைன்னு உணர்ந்தா அதை வெளிப்படையா ஒத்துக்கிட்டு மாத்திக்கிடுற ஆளாச்சே... இப்ப முதுகுக்குப் பின்னால பேசுறவங்களால சோர்வடையுறன்னா உனக்கு வயசாயிட்டதா நீ நினைக்கிறேன்னுதான் அர்த்தம்.”

“......”

“கிளம்பு கிளம்பு, மறுபடி தெளிவா, தெம்பா, திமிரா கிளம்பு.”

Thursday 30 July 2015

யாரையும் சார்ந்திருக்காமல் சுயேச்சையாக வாழ்வது குறித்து...

உளமாடும் உரையாடல்

(ஏற்கெனவே தெரிவித்தது போல் இது நெருக்கமானவர்களோடு அவ்வப்போது நடத்திய உரையாடல்களின் பதிவு. அந்த உரையாடல்களிலிருக்கும் பொதுச்செய்தியைப் பகிர்ந்துகொள்வதே இதன் நோக்கம். அந்த நெருக்கமானவர்கள் யார், உடனிருப்பவர்களா, உற்ற தோழமைகளா, பொறுப்புகளில் இருப்பவர்களா, குறிப்பிட்ட அடையாளமற்றவர்களா, பெண்களா, ஆண்களா, மாற்றுப் பாலினத்தவர்களா, சமவயதினர்களா, வயது கூடியவர்களா, குறைந்தவர்களா... என்ற குடைவுகளின்றி படிக்கக் கேட்டுக்கொள்கிறேன். விளக்கம் அளித்தது மட்டுமல்லாமல், விளக்கம் பெற்றதும் நானாக இருக்கக்கூடும் என்பதால் அதையும் கடந்து, உரையாடலுக்குள் மட்டும் பயணிக்க வேண்டுகிறேன்.)

“என்ன திடீரென்று ஆள் காணாமப் போயிட்ட? என்னோடுதான் தொடர்பில் இல்லைன்னு பார்த்தால் நம் நண்பர்கள் பலரும் உன்னோடு தொடர்புகொள்ள முடியலைன்னு சொன்னாங்களே...”

“ஒண்ணுமில்லை...”

“ஒண்ணுமில்லைன்னு நீ சொல்றதால ஏதோ இருக்குது. எதுவுமே இல்லாம பேரண்டத்திலே எதுவுமே இல்லைன்னுதான் அறிவியல் சொல்லுது.”

“அட, கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருக்கேன், அதுக்குப் போயி இப்ப எதுக்கு அறிவியல் தத்துவமெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ற?”

“அப்படி வா வழிக்கு. தொடர்ந்து நான் தத்துவம் பேசறதுக்குள்ள உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிவிடு.

மனசுவிட்டு எதை வேணும்னாலும் பேசமுடியும்கிறதுக்காகத்தானே உன்கிட்ட வர்றதே...”

“சரி சரி, விசயத்துக்கு வா.”

“இனிமே யாரையும் டிபெண்ட் பண்ணியிருக்கக்கூடாது, இண்டிபெண்டன்ட்டா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன். அப்படி இண்டிபெண்டன்ட்டா இருக்குறதுதான் சரின்னு என் கூட இருக்கிறவங்களும் சொல்றாங்க.”

“அது சரியா தப்பான்னு அப்புறம் பார்க்கலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டியதிலைங்கிற முடிவுக்கு இப்ப நீ வர்றதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“பணத்துக்காகவோ, ஒரு மாரல் சப்போர்ட்டுக்காகவோ, வேற வாய்ப்புகளுக்காகவோ, சும்மா ஹேப்பியா இருக்குறதுக்காகவோ கூட யாரையாவது சார்ந்திருக்கிறப்ப, அவங்க நம்மை ஏதோ ஒரு வகையிலே இளக்காரமா பார்க்கிறாங்க. நமக்கே கூட ஒரு கான்ஃபிடன்ஸ் வர மாட்டேங்குது.”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லு.”

(என்ன நடந்தது, யார் என்ன பேசினார்கள் என்ற தகவல்கள் சொல்லப்படுகின்றன.)

“... இப்ப சொல்லு, நான் எடுத்த முடிவு சரிதானே?”

“அவங்க அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற அளவில் உன் வருத்தம் நியாயமானதுதான். ஒருவருக்கு ஒரு உதவியைச் செஞ்சிட்டு, அப்புறம் அதைச் சொல்லிக்காட்டுறதே அநாகரிகம், அதுக்காக இளக்காரமா பேசுறதோ அதை விடவும் அநாகரிகம். ஆனால் அவங்ககிட்டே வாதிடணும், யோசிக்க வைக்கணும். அவங்க மாறலைன்னா, நாம சார்ந்திருக்கிற இடத்தை, ஆட்களை மாத்திக்கிடலாம். நம்மகிட்ட தப்பு இருக்கும்னா நம்மையும் மாத்திக்கிடலாம். அதை விட்டுட்டு யாரையுமே சார்ந்திருக்க வேண்டியதில்லைன்னு முடிவெடுக்கிறது தவறு, அது சாத்தியமுமில்லை.”

“ஏன் சாத்தியமில்லை?”

“இப்ப நான் அறிவியல் தத்துவமாத்தான் பேச வேண்டியிருக்கு. உலகத்திலே எதுவுமே எதையுமே சார்ந்திருக்காமல் இல்லை. யாருமே யாரையுமே சார்ந்திருக்காமல் இல்லை. ஒன்றையொன்று சார்ந்திருக்காத முழு சுயம்புன்னு பேரண்டத்திலேயே எதுவும் கிடையாது.”

“ஏன், நான் சுயமா சம்பாதிக்கிறேன், சொந்தமா வீடு கட்டியோ வாடகை கொடுத்தோ குடியிருக்கிறேன்,  என் முயற்சியிலேயே எங்கே வேணும்னாலும் டிராவல் பண்றேன்னு வாழ முடியாதா?”

“நீ சொன்ன எதிலாவது முழுக்க முழுக்க சுயம், வேறு யாருமே சம்பந்தப்படாத சுயேச்சைன்னு இருக்கா? சொந்தமா வீடு கட்டுறதுன்னா மனை வாங்குவது, வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறுவது, கட்டி முடிப்பது, மின்சார இணைப்பு பெறுவது, குடிநீர்க் குழாய் பொருத்துவது, அதிலே நிற்காமல் தண்ணீர் வரவைப்பது, நாற்காலி கட்டில்னு போடுவது, பால் பாக்கெட் போட வைப்பது, சமையல் வாயு வரவழைப்பது... இப்படி எத்தனை விசயங்களில் எத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கு? வாடகை வீடுன்னா கூட வீட்டு உரிமையாளர் எப்படிப்பட்டவர்ங்கிறதைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கே! உன் சொந்தப் பணத்திலே பயணம் போகலாம், ஆனால் வாகன ஓட்டுநரையும் அவரது திறமையையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கா இல்லையா? எங்கே, யாரையுமே எதற்குமே சார்ந்திருக்காத நூறு சதவீத சுயேச்சையான வாழ்க்கைன்னு ஒரு எடுத்துக்காட்டு சொல்லு பார்க்கலாம்?”

“அது வேற, இது வேற இல்லையா?”

“இப்படி யாரையும் சார்ந்திருக்காம சுயேச்சையா - இண்டிபெண்டன்ட்டா - இருக்கணும்கிற மனநிலையை ஏற்படுத்துவதே இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்புதான் என்கிற வர்க்க அரசியலும் இதுக்குள்ளே இருக்கு தெரியுமா? மனிதர்களுக்குக் கூட்டுச் செயல்பாட்டுச் சிந்தனை வராமல், சுயேச்சையா இருப்பதிலே ஒரு மோகத்தை அல்லது நாட்டத்தை ஏற்படுத்திவிட்டால், சுரண்டப்படும் மக்கள் ஒன்றுபட மாட்டார்கள். அது சுரண்டல் மகா சக்திகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு! ஏற்கெனவே நாடுகளின் எல்லைக்கோடுகளாக, இன அடையாளங்களாக, மத நம்பிக்கைகளாக, சாதிப் பெருமைகளாகக் கூறுபோடப்பட்டிருக்கிறோம். இதிலே சுயம், சுயேச்சைன்னு தனித்தனி மனிதர்களாகவும் ஒதுங்கிக்கொள்ளலாமா?”

“இதிலேயும் அரசியலா?”

“எல்லாத்துக்கும் மேலே, மற்றவர்களைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலகுகிறாய் என்றால் மற்றவர்களும் உன்னைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலக்குகிறாய். அதற்குப் பெயர் சுயநலம் இல்லையா?”

“அது வந்து...”

“அது வந்துன்னு இழுக்கிறியே, இது போதும். நீ சிந்திக்கத் தொடங்குகிறாய்...”

Saturday 18 July 2015

புண்படுத்தப்படுவதான அரசியல்

ஊ என்றால் இப்படியாகத்தான் ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய மனம் புண்படுத்தப்படுவதாகக் கூறியே புதிய கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள். அவர்கள் கேட்கமாமல் போவது அவர்களுடைய விருப்பம், ஆனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கே அவர்களே ஏகபோக ஆணையர்களாகத் தங்களுக்குத் தாங்களே அவதரித்துக்கொண்டு, யாருமே அந்தப் புதிய கருத்துகளைக் கேட்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களைச் சார்ந்துள்ள மக்களிலும் பெரும்பாலோர், "எது ஒன்றையும் நாங்கள் கேட்டு முடிவு செய்துகொள்கிறோம்" என்று சுதந்திரமாக நிற்பதற்கு மாறாக, தலைவர்கள் சொன்னால் சரிதான் என்று மாற்றுக் கருத்துகள் எதையும் கேட்டுக்கொள்ளாமல் ஒதுங்குகிறார்கள். ஒதுங்கிப்போவதோடு நிற்காமல், சில நேரங்களில் மேற்படி தலைவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தவர்களைத் தாக்கவும் துணிகிறார்கள்.

எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து அந்த எழுத்தாளர்களையே தாக்குவது, குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தை முன்வைத்து அந்தத் தொலைக்காட்சி ஊழியர்களைத் தாக்குவது, ஒரு கதையின் மூலம் கேள்வி எழுப்புகிறவர்களை ஊரை விட்டே ஒதுக்குவது, ஒரு கவிதையால் ஒரு விமர்சனத்தை முன்வைப்பவர்களின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி வசைபாடுவது, ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சட்டப்பூர்வமற்ற தணிக்கைக்குழுவாக மாறி அந்தப் படத்தைத் திரையரங்கிற்குள் நுழைய விடாமல் முடக்குவது அல்லது சில காட்சிகளையோ, வசனங்களையோ நீக்கும்படி கெடுபிடி செய்வது, ஆய்வுகளாலும் விவாதங்களாலும் அறிவுப் பயிர் செழித்தோங்க வேண்டிய பல்கலைக்கழக வளாகத்திலேயே மாற்றுக் கருத்துடையோர் உரையாற்றவிடாமல் தடுப்பது, புதிதாக ஒரு புத்தகம் வருகிறதென்றால் அந்தப் புத்தக வெளியீட்டையே கெடுப்பது...
இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், ஒரு திரைப்படத்தில் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தை விமர்சித்து ஒரு வசனம் வருகிறதென்றால், உடனே அது வழக்கறிஞர்கள் அத்தனை பேரையும் சாடுகிறது என்று கூறி அந்த வசனத்தை நீக்க வேண்டும் அல்லது கதாபாத்திரத்தையே மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்! வழக்கறிஞர் என்ற இடத்தில் மருத்துவர், ஆசிரியர், வர்த்தகர், சாமியார்... இன்னபிற கதாபாத்திரங்களைப் போட்டுக்கொள்ளலாம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படி இங்கே நடந்துகொண்டிருக்கிறது. சுயமாகக் காதுகளை அடைத்துக்கொள்கிற மனநிலையோடு  இவர்கள் நாடு வல்லரசாக மாறுவது பற்றி முழங்குவது நல்ல நகைச்சுவையான முரண்!
தங்களது நம்பிக்கை அல்லது கலாச்சாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும் அதனால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் கூறியே இதையெல்லாம் செய்கிறார்கள். எதற்கடா வம்பு என்று நினைத்தோ, வாக்கு வங்கி வளர்ப்புக்காகவோ அரசாங்கமும் இதற்கெல்லாம் துணைபோகிறது, அரசு அதிகாரிகளே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள், புத்தகத்தை விலக்கிக்கொள்ள வைக்கிறார்கள், திரைப்படத்தில் கத்தரி போட வைக்கிறார்கள், உரையரங்குகளை நிறுத்தவைக்கிறார்கள்.

கருத்து - மாற்றுக் கருத்து, வாதம் - எதிர்வாதம் என்பதையெல்லாம் அனுமதிக்காத சமுதாயம் பாசிபிடித்து நஞ்சேறிய குட்டையாகவே தேங்கிப்போகும். சமூகம் அப்படி தேங்கிக்கிடப்பதுதான் நல்லது - அதாவது தங்களுக்கு நல்லது - என்று நினைக்கிறவர்கள், அதற்கு ஆதரவாகத் தங்களது ஆட்களைத் திரட்டப் பயன்படுத்துகிற சொல்லாடல்தான் எங்கள் மனம் புண்படுத்தப்படுகிறது, என்பது. குறிப்பாக இதனை சாதி அமைப்புகளும், சாதிப் பாகுபாடுகளைக் கட்டிக்காப்பதற்கென்றே கட்டமைக்கப்பட்ட மதவாத அமைப்புகளும்தான் செய்கின்றன.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்ட சாதிகளையும் சேர்ந்தவர்கள் அவர்களது மரபின் பெருமையை எடுத்துக்கூறும் புத்தகத்தை எழுதினால், தங்களுடைய உணர்வு புண்படுத்தப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். புத்தகம் தடை செய்யப்படுகிறது. உண்மையிலேயே அந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று யாருமே தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. அந்தப் புத்தகத்தில் உண்மையிலேயே தரக்குறைவான சொற்கள் இருக்குமானால், உண்மைக்கு மாறான தகவல்கள் எழுதப்பட்டிருக்குமானால் அதைக் கடுமையாக விமர்சிக்கிற வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரத்தை வலியுறுத்தும் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகிறபோதும் இதே போல் தங்களுடைய பாரம்பரியப் பெருமை புண்படுத்தப்படுவதாகக் கூறி கிளம்பிவிடுகிறார்கள். அதற்கு ஆதரவாகத் தங்களுடைய வட்டத்தைச் சேர்ந்த பெண்களையும் திரட்டிக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே ஒரு மாற்றுக் கருத்து புண்படுத்தி விடுமா? நிலத்தைத் துளைக்காமல் பயிர் வளருமா? கல்லைச் செதுக்காமல் சிலை வெளியே வருமா? நிலத்தை உழுவது புண்படுத்துகிற செயலா? கல்லை உதிர்ப்பது புண்படுத்துகிற நடவடிக்கையா? உண்மையில், புண்பட்டுக் குதறிப்போயிருக்கிற சமூக உடலில் மருந்திடுவதைத்தான் இவர்கள் தடுக்கிறார்கள்.

கதைகளிலோ, நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ, மேடைப்பேச்சுகளிலோ, தொலைக்காட்சி-வானொலி உரைகளிலோ எப்படியெல்லாம் பொதுவுடைமைக் கருத்துகளை, நாத்திகச் சிந்தனைகளை மட்டம் தட்டுகிறார்கள்! சிவப்புச் சிந்தனைகளைப் பேசுகிற கதாநாயகன் பயங்கரவாதி போல சித்தரிக்கப்பட்டு இறுதியில் மனம் திருந்துவதாகக் கதை செய்கிறார்கள்! தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளிகளைக் காட்டிக்கொடுப்பது போல் காட்சிப்படுத்துகிறார்கள்! நாத்திகவாதம் பேசுகிற பெண்ணைத் திமிர் பிடித்தவளாகக் காட்டி, கடைசியில் அவள் கடவுளின் சக்தியை உணர்வதாக முடிக்கிறார்கள்! சுய மரியாதைக்காக வாதாடுகிற பெண்ணை அடங்காப்பிடாரியாக சிதிதரித்து பின்னர் அவள் அடக்க ஒடுக்கமாக மாறி பெண்மையின் பெருமையைக் காக்கிற தேவதையாக்குகிறார்கள்!

இதெல்லாம் புண்படுத்துகிற வேலையில்லையா?
ஆனால், சிவப்புச் சிந்தனையாளர்களும் பகுத்தறிவாளர்களும் பெண்ணியலாளர்களும் இதற்கெல்லாம் தடை கோரவில்லை. மாறாக, தங்களது மாற்றுக் கருத்துகளையும் தாங்கள் சரியானதெனக் கருதுகிற நிலைகளையும் விளக்குவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்படி புண்படுத்துப்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறவர்களைப் பார்த்து சில முற்போக்காளர்கள் பயந்துவிடுகிறார்கள் என்பது இன்னும் பரிதாபம். சமுதாய மாற்றத்திற்காகப் போராடக் களம் இறங்கியவர்கள், கண் முன் நடக்கும் அநீதிகளையும், பண்பாட்டுத் திரை மறைவில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளையும், நம்பிக்கையின் பெயரால் தொடரும் அபத்தங்களையும் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். கேட்டால், அதையெல்லாம் விமர்சிப்பது மக்களின் மனதைப் புண்படுத்தி விடும், பிறகு அவர்கள் போராட்டங்களுக்கு வரமாட்டார்கள் என்பார்கள். சமுதாய மாற்றம் நிகழும்போது மற்றதெல்லாம் தானாக மாறிவிடும் என்று நவீன கருத்துமுதல்வாதிகளாக இருந்துவிடுகிறார்கள்.

ஆனால் சமுதாய மாற்றத்திற்கான போராட்டம் அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் அமைத்துக்கொண்டு வரிசைப்படி நிறைவேற்றக்கூடியதல்ல. லட்சியத்திற்காகப் பயணித்துக்கொண்டே வழியில் எதிர்ப்படுகிற முட்டுக்கட்டைகளையும் அகற்றத்தான் வேண்டும். அப்போது அந்த முட்டுக்கட்டைகளுக்குப் புண்படத்தான் செய்யும். அதற்காக அவற்றை அப்படியே விட்டுவிடுவதானால் அங்கேயே நிற்க வேண்டியதுதான், இலக்கை அடைவது மேலும் மேலும் தள்ளிப்போகும்.

அதே போல், மாற்றுக் கருத்துகளை முன்வைத்து சமூக விமர்சனத்திற்குத் துணிகிறவர்களில் சிலர், பழமைக் கருத்துகளை அப்படியே ஊறவைத்துக் கெட்டிப்படுத்திக்கொண்டிருக்கிற வர்க்கச் சுரண்டல் பற்றியோ, நவீன உலகமய தாராளமய தனியார் மய வேட்டைகள் பற்றியோ வாய் திறப்பதில்லை. இதனால், இந்த வேட்டைகளை நடத்திக்கொண்டிருக்கிற சுரண்டல் சக்திகள் எவ்விதத்திலும் புண்படாமல் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன.

இதை சரியாகப் புரிந்துகொண்டவர்களாக மார்க்சியவாதிகளும் பகுத்தறிவாளர்களும் உரிமைப் போராளிகளும் விடுதலைத் தாகம்கொண்டவர்களும் சமத்துவ லட்சியம் பூண்டவர்களும் தோள் சேர்ந்து அணிவகுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைக் கண்டும் சிலர் புண்படுகிறார்கள், அதற்கு என்ன செய்ய முடியும்?

(‘தீக்கதிர்’ 2015 ஜூலை 12 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)

Sunday 11 January 2015

வேத கால விமானத்தில் கடத்தப்படும் அறிவியல்

ந்தக் கால பெருமை பேசுவதில் சுகம் காணுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். தங்களது பரம்பரையின் முன்னோடித் தலைமுறையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக யாரோ ஒருவர் ஏதோவொரு சிற்றரசின் மன்னராக சில காலம் இருந்ததாகச் சொல்லி “நாங்க ஆண்ட பரம்பரை,” என்பதாக நெஞ்சு நிமிர்த்திக்கொள்வார்கள். அந்த சிற்றரசின் பரப்பு இன்றைய ஒரு ஊராட்சி ஒன்றிய அளவுக்காவது இருந்திருக்குமோ என்னவோ. பற்பல தலைமுறைகளுக்கு முந்தைய ஒருவர் மக்களை அடிமைப்படுத்திய மன்னனாக இருந்ததில் இன்று பெருமைப்பட என்ன இருக்கிறது என்று கேட்கலாம்தான்.

ஆனால் இவர்களிடமாவது என்றோ, யாரோ சிறியதொரு அரியாசனத்திலாவது இருந்தார்கள் என்ற சிறு உண்மை இருக்கிறது. வரலாற்று ஆதாரம் இருக்கிறது. தர்க்க நியாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட உண்மையோ, வரலாற்று ஆதாரமோ, தர்க்க நியாயமோ இல்லாமல் சிலர் பாரம்பரியப் பெருமைவாதங்களைக்  கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அறிவியல் கண்ணோட்டமற்ற அப்படிப்பட்ட வாதங்கள் அறிவியலின் பெயராலேயே செய்யப்படுவது காலக்கொடுமை. அதுவும், அறிவியலாளர்களது சபையிலேயே அந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டு அவர்களது அறிவியல் தெளிவு பரிகாசத்துக்கு உள்ளாக்கப்படுவது பெருங்கொடுமை. அதிகார பீடத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அறிவியலாளர் என்ற அங்கிகளைப் போர்த்தியிருப்போரும் அந்த வாதங்களைப் புகட்ட முயல்வது இன்னும் பெரிய கொடுமை.

இப்படியான கொடுமைகளோடுதான் இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் ஜனவரி 3 முதல் 7 வரையில் நடந்து முடிந்திருக்கிறது. அறிவியலை வளர்ப்பது, அறிவியலாளர்களை ஊக்குவிப்பது, உலக அறிவியல வளர்ச்சிகளை இந்தியா உள்வாங்கிக்கொள்வது, உள்நாட்டு அறிவியல் புரிதல்களை உலகத்திற்குப் பகிர்வது என்ற நோக்கங்களுடன்தான் அறிவியல் மாநாடுகள் நடததப்படுவது தொடங்கியது. அந்த நோக்கங்கள் எந்த அளவுக்கு நிறைவேறும் என்ற கேள்வியை எழுப்புவதாக இவ்வாண்டு மாநாட்டின் சில நிகழ்வுகள் அமைந்தன.

“அறிவியல் மர்மங்களை அவிழ்த்திடுவீர்!” -மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிவிடுத்த வேண்டுகோள் இது. தனக்கே உரிய சொல்லாற்றலோடு, அந்த அறிவியிலாளர்களின் முன்னே தன்னை மிக எளிய மனிதனாக உணர்வதாகவெல்லாம் பேசினார். இதனால் அவர்களின் அவர்களின் மனங்களை வென்றிருப்பாரா?
முதலில் அறிவியலில் மர்மம் இருக்க முடியுமா? இயற்கையின் உண்மைகளைக் கண்டறிவதுதான் அறிவியல். அப்படிக் கண்டறிந்த உண்மைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குத்தான் தொழில்நுட்பங்கள். ஆனால், அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, அழிவுப் பள்ளத்தில் தள்ளிவிடும் ஆயுதங்கள் - அம்புகள் முதல் அணுகுண்டுகள் வரையில் - தயாரிக்கப்படுவது போலவே, அதே அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அறியாமைக் குழியில் தள்ளிவிடும் விவாதங்கள் - வேத கால விமானங்கள் முதல் புராணத்து பிளாஸ்டிக் சர்ஜரிகள் வரையில் - தலையிலேற்றப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த சிலர் சுயநல நோக்கங்களுக்காக அவற்றை வெளியிடாமல் வைத்திருக்கக்கூடும். முன் காலத்தில் சில மூலிகைகளின் மருத்துவ குணங்களைக் கண்டறிந்த சிலர், வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தாமல் தங்களது வாரிசுகளுக்கு மட்டும் சொல்லி பரம்பரை ரகசியமாகப் பாதுகாத்து வந்ததுண்டு. ஆயினும் அறிவியல் தேடல் உள்ளவர்கள் முயன்றால் அப்படிப்பட்ட பயன்பாடுகளைக் கண்டுபிடித்துவிட முடியும்.

அறிவியலின் பெயரால் சில அபத்தங்களைப் பரப்புவதுதான் மர்மமானது. அதன் உள்நோக்கம் வெளிநோக்கம் என்ன என்பது ஆராய்ந்து உரைக்கப்பட வேண்டியது. அது ஏதோ அரசியல் விவகாரம் என்றோ, அறிவியலுக்குத் தொடர்பற்ற விவாதம் என்றோ கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அறிவியல் என்பதே ஏதோ சோதனைக் குடுவைகளும் மின்னணுச் சீவல்களும் மட்டுமல்ல. அரசியல் உண்மைகளைக் கண்டறிவது அரசியல்-அறிவியல், சமூக உண்மைகளை ஆராய்வது சமூக-அறிவியல். இயற்கை  அறிவியல், அரசியல் அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைப்பற்றவையாகத் தனித்துப் பிரித்து வைக்கப்பட்டிருப்பதிலேயே கூட ஒரு அரசியல் இருக்கிறது!

அந்த அரசியல் காரணமாகத்தான், தொண்மைக்கால இந்திய மண்ணில் உண்மையான வேட்கையோடு தொடங்கிய அறிவியல் தேடல்கள் முடக்கப்பட்டன. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டுவிட்டது, அதைத் தாண்டிய உண்மைகள் எதுவுமில்லை, அனைத்தும் இறைவனின் தீர்மானப்படி இயங்குகிறவையே, அதை ஆராய முயல்வது இறைவனுக்கு விடுக்கப்படும் சவால்தான் என்ற கற்பிதங்கள் கட்டப்பட்டன. விண்ணில் வலம் வரும் நட்சத்திரங்களின் சுழற்சிக்கும், புவியில் ஏற்படும் பருவகால மாற்றங்களுக்கும் கால அளவிலான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த முன்னோர்களின் அருமையான அஸ்ட்ரானமி என்ற வானியல் அறிவியலாகத் தொடங்கியது, பின்னர் நட்சத்திர அசைவுகளுக்கும் தனி மனித வாழ்க்கை மாற்றங்களுக்கும் தொடர்பிருக்கிறது எனக்கூறும் அஸ்ட்ராலஜி என்ற சோதிட ஏமாற்றுவேலையாக மாற்றப்பட்டது.

அறிவியல் வளர்ச்சியை அடக்கியதன் இன்றைய பதிப்பாகத்தான், அந்த அறிவியல் மாநாட்டிலேயே ஒருவர், 7,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆகாய விமான தொழில்நுட்பம் இருந்தது என்ற “ஆய்வுரை” வாசித்திருக்கிறார். அதுவும் அந்த விமானங்கள் வானத்தில் முன்னோக்கிப் பறப்பவையாக மட்டும் இருக்கவில்லை, பக்கவாட்டில் கூட பறக்கத்தக்கதாக இருந்தன என்றார். நாடு விட்டு நாடு மட்டுமல்ல, கண்டம் விட்டு கண்டம் மட்டுமல்ல, வேறு கிரகத்திற்குக் கூட செல்லக்கூடியவை என்றும் சொல்லியிருக்கிறார். அவர் பெயர் கேப்டன் ஆனந்த் ஜே. போடாஸ். விமானிகள் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்றால், வேதங்கள் என்கிறார்.
“அதிகாரப்பூர்வ வரலாறு உண்டு, அதிகாரப்பூர்வமற்ற வரலாறும் உண்டு. அதிகாரப்பூர்வ வரலாறு 1903ல் ரைட் சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று சொல்கிறது. ஆனால் முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் இந்து துறவி மகரிஷி பரத்வாஜ்.  அந்த விமானத்திற்கு 40 இன்ஜின்கள் இருந்தன. நவீன விமானங்களில் செய்ய முடியாத, எப்படி வேண்டுமானாலும் இயக்கக்கூடிய உந்துவிசை முறை இருந்தது...” என்று அவர் தொடர்ந்து பேசியிருக்கிறார்.

அந்த 30 நிமிட பேச்சில் அங்கே கூடியிருந்த அறிவியலாளர்கள் விமானம் விபத்துக்குள்ளானது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்க, விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்கள் முதல், ராக்கெட்டுகள் வேறு கோள்களுக்குப் பயணிக்க ஆதாரமான புவியூயீர்ப்பு விசையைக் கண்டறிந்த நியூட்டன் வரையில் எவ்வளவு எளிதாக அவமதிக்க முடிகிறது! இதைப் பற்றிக் கேள்வி கேட்டால் இருக்கவே இருக்கிறது “நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது,” என்ற விளக்கம்! இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமன் சேதுப் பாலத்தைக் கட்டினான் என்று சொல்வதை அறிவியல் கண்ணோட்டத்தின்படி ஏற்க முடியுமா என்று கேட்டதற்கு, இதே போல் நம்பிக்கைகள் விசாரணைக்கு அப்பாற்பட்டவை என்று பதிலளித்தவர்கள்தானே?

ஒரு வாதத்திற்கு அப்படி 7,000 ஆண்டுகளுக்கு முன் மிக நவீனமான விமானம் இருந்ததாக வைத்துக்கொள்வோம். அதன் மிச்ச சொச்சங்கள் எங்காவது இருக்கிறதா? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனசோர்களின் எலும்புக்கூடுகள் கூட இன்று அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கின்றன. மசூதிகளுக்கு அடியில் இருந்த இந்துக்கோயில் தூண்கள் இவைதான் என்று காட்சிப்படுத்துகிறார்கள். ஏன் அப்படியொரு விமானத்தின் ஏதாவது ஒரு பாகத்தை தோண்டியெடுத்து வைக்கக்கூடாது? ஒரு வேளை அந்த விமானங்கள் வேறு கிரகங்களுக்குச் சென்றிருந்தபோது அங்கேயே விழுந்து அங்கேயே புதைந்துவிட்டனவோ? அட கிரகமே!

அனைத்தும் கடவுளின் திட்டப்படியே நடக்கின்றன என்று உறுதியாக வலியுறுத்தப்பட்ட காலத்தில், கடவுளின் ஏற்பாட்டை மீறி கிரக விமானம் தயாரிக்கப்பட்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்குப் போவதே கூட பாவம் என்று போதிக்கப்பட்ட சமூக அமைப்பில் அந்த விமானத்தில் ஏறி வேறு கிரகங்களுக்குச் சென்றவர்கள் யாரோ?
அதுவும், முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் மகரிஷி பரத்வாஜ் என்று போடாஸ் சொல்லவில்லை. “இந்துத் துறவி மகரிஷி பரத்வாஜ்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதெல்லாம் மதவாதம் என்றால் மறுப்பார்கள், மற்றவர்கள் மவுனமாக ஏற்க வேண்டும்.
நாட்டின் அரசமைப்பு சாசனம், சமுதாயத்தில் அறிவியல் மனநிலையை வளர்ப்பது அரசின் கடமை என்று கூறுகிறது. அறிவியல் மனநிலையை வளர்ப்பதற்காகத்தான் மாநாட்டிற்கு வருவதற்கு முன் வேறொரு நிகழ்ச்சியில், புராணத்தில் வரும் பிள்ளையார் கதை அந்தக் காலத்திலேயே இங்கே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்ததற்கான ஆதாரம் என்று பிரதமர் பேசினார் போலும்! காந்தாரிக்குக் குழந்தைகள் பிறந்தது அன்றைக்கே ஸ்டெம் செல் சிகிச்சை இருந்ததைக் காட்டுகிறது என்று கூறினார் போலும்! கழுத்து வெட்டப்பட்ட ஒரு மனித உடலில் இன்னொரு மனிதத் தலையையே கூட ஒட்ட முடியாது, யானைத் தலையை ஒட்ட முடியுமா, அதன் மூளையை மாற்ற முடியுமா என்றெல்லாம் கேட்டால் நீங்கள் நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறவராகிவிடுவீர்கள்.

புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இலக்கிய ஆக்கங்களின் கற்பனை வளத்தை மதிப்பிடுவது வேறு. அதை நம்புவது வேறு. குழந்தைகள் கதை சொன்னால் அதில் வரும் மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள், எங்கே வேண்டுமானாலும் செல்வார்கள். அது ரசனைக்குரியது, ஊக்குவிக்கப்பட வேண்டியது. இவர்கள் செய்வதுவோ ரசனைக்குரியதுமல்ல, மதிக்கத்தக்கதுமல்ல. மக்களைக் குழப்புவதற்காக அவதாரமெடுப்பவை இவை.

கைப்பேசி முதல் கணினிகள் வரை அறிவியலைப் பயன்படுத்துகிற நாட்டில் அறிவியல் மனநிலை இன்றளவும் சவலைப்பிள்ளையாகவே விடப்பட்டிருக்கிறது. ஆகவேதானே ‘இஸ்ரோ’ வல்லுநர்கள் செவ்வாய்க்கோளுக்கான ‘மங்கள் யான்’ முயற்சியில் வெற்றிபெற்றிருப்பது பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறபோதே, அந்த நிறுவனத்தின் தலைவர் திருப்பதிக்குப் போய் வெங்கடாஜலபதி முன்பாக மங்கள் யானின் குறுக்கப்பட்ட வடிவத்தை வைத்து வழிபட்டார் என்ற செய்தியைப் படித்து சங்கடமும் வருத்தமும் அடைய வேண்டியிருக்கிறது.
மாநாட்டில் பங்கேற்ற சுமார் 200 அறிவியல் வல்லுநர்களுக்கு இந்த உறுத்தல் இருந்திருக்கிறது. வேதகால விமானத் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலேயே ஒரு தனி ஆய்வு அமர்வுக்கு நிகழ்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோது, அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிடுகிற துணிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய எதிர்ப்பின் காரணமாக அந்த அமர்வு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், கிடைத்த சந்தில் புகுந்து சிந்து பாடினார் மேற்படி போடாஸ்.

முன்பே இப்படி தடம்புரட்டப்பட்டதால்தான், அறிவியல் தேடலில் முன்னணியில் இருந்த இந்திய சமுதாயம், பின்னர் 2,000 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று ‘வேதங்களின் நாடு’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மார்க்சிய தத்துவ ஆசான் இ.எம்.எஸ்.  இயற்கையின் உண்மைகளைக் கண்டறியும் ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதில், சுரண்டல் - ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை நிலைநாட்டும் அரசியல் இருக்கிறது என்று ‘தத்துவம் சமுதாயம் அரசியல்’ புத்தகத்தில் கூறுகிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

அறிவியலில் மாற்றுக் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் இல்லையா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக இருக்கிறது. ஆனால், ஆய்வுக்கும் விவாதத்திற்கும் கதவுகளை அடைத்துவிட்டு நம்பிக்கை என்ற பூட்டுப் போடுவதில்தான் சிக்கல். அதுவும், இதையெல்லாம் தேசியப் பெருமையோடும் தேசப் பற்றோடும் முடிச்சுப் போடுகிறார்கள். அது மிக மிக சிக்கல். உண்மையான, இயற்கையான, மக்களுக்கான அறிவியல் கரங்கள் அந்த சிக்கல்களைத் தகர்க்கட்டும்.

(‘தீக்கதிர்’ 11-1-2015 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை)