Friday 7 June 2013

‘பெத்தவன்’ - இது வெறும் சிறுகதையல்ல

புத்தக அறிமுகம்

உண்மையோடு கற்பனை கலந்துறவாடுகிற ஒரு இலக்கியப் படைப்பு நேரடி உண்மையை விடவும் பல மடங்கு வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்த வல்லதாக இருக்கும். எந்த இடம் வரையில் உண்மை, எங்கேயிருந்து கற்பனை என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இமையம் படைத்துள்ள பெத்தவன் சிறுகதை அப்படியொரு வாழ்க்கை உண்மையை அழுத்தமாக உணரவைக்கிறது. மிகையான பெருமிதங்களின் அடியில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை நிலைமைளை உணர்வது என்பது அந்த நிலைமைகளை மாற்றுவதற்கான முதற்படி. தமிழக கிராமங்களின் தெருக்களில் புரையோடிப்போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உணரச் செய்து அந்த முதற்படியில் கைப்பிடித்து ஏற்றிவிடுகிற பணியைத் தமது அனைத்துப் படைப்புகளிலும் செய்து வந்திருப்பவர் இமையம்.

தமிழகத்தில் விடுதலைப்போராட்ட காலத்தில் பிராமணர் அல்லாத சமூகங்களை அரசியலாகத் திரட்டுகிற முயற்சிபில் திராவிட இயக்கம் உருவானது. தனி மனிதர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டவைத்துக்கொள்வதை அருவருப்பானதாக உணரச்செய்து, பெண்ணுரிமைக் கருத்துகளுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுதது, பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு ஒரு சமூக மரியாதை கிடைக்கச்செய்ததோடு சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டியதிலும் திராவிட இயக்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்களிப்பு மறுக்கவியலாதது.

இன்றைக்குத் தமிழகத்தில் வேறு வகையான அணிதிரட்டல் வேலை நடந்துகொண்டிருக்கிறது. தலித் அல்லாத சமூகங்கள் அரசியலாகத் திரட்டப்படுவதன் அப்பட்டமான நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அலலது அதிகார பேரம் நடத்துவது. அனைத்து சமுதாய தலைவர்கள் பேரவை என்பது போன்ற பெயர்களில் கூட்டப்படுகிற கூட்டங்களில், அந்த மேட்டுத்தெரு சமூகங்களின் மக்கள் மனங்களில் ஏற்கெனவே குடியேற்றப்பட்டிருக்கிற தலித் விரோத மனநிலைகள் மேலும் மேலும் வளர்க்கப்படுகின்றன. நெடும் போராட்டங்களின் பலனாக சில தலித் குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டிருக்கிற சிறிதளவு முன்னேற்றங்களையும் சகித்துக்கொள்ள முடியாத வன்மங்கள் கூர்தீட்டப்படுகின்றன. இளம் தலித் ஆண்களுக்கும் பிற சாதிகளின் இளம் பெண்களுக்கும் ஏற்படுகிற இயற்கையான காதல் உணர்வுக்கு எதிரான ஆத்திரத் தீயில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. அதன் மூலம் அந்த சமூகங்களின் பெண்களுக்குத் தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்ட பரம்பரை என்பது போன்ற  பெருமைக்கட்டுமானங்களால் பகுத்தறிவு இழிவுசெய்யப்படுகிறது. அந்த போலியான கட்டுமானங்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது தலித் குடியிருப்புகளின் மீதான வன்முறைத் தாக்குதல்களாக, காதலர்களைக் காவு கொடுக்கும் கவுரவக் கொலைகளாக வடிவெடுக்கிறது.

இடதுசாரிகள் வலுவான இயக்கமாக வேரூன்றியிருக்கிற இடங்கள் தவிர்த்து நாடு முழுவதுமே இந்த தலித் எதிர்ப்பு அரசியல் அணிதிரட்டல் நடக்கிறது. இந்திய சமுதாயத்தின் தனித்துவ அநாகரிகமான சாதியப் பாகுபாடுகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அப்படியே கட்டிக்காக்கிற இந்த அணிதிரட்டலின் பின்னால் திருட்டுச்சிரிப்பு சிரிக்கிறான் மனு. தன்னை மேலிருந்து ஒரு சாதி மிதிக்கிறது என்ற கோபத்தை விடவும், தனது காலுக்குக் கீழே மிதிபடுவதற்கு ஒரு சாதி இருக்கிறது என்பதில் ஒரு மனநிறைவை ஏற்படுத்திய சூட்சுமத்தின் சிரிப்பு அது. போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை என்ற வர்க்க உணர்வு முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே தொடர்ந்திருக்க, ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது என்ற பாறை போன்ற உண்மை இங்கு வர்க்கப்போராட்ட அணிதிரட்டலுக்கு இன்னும் எவ்வளவு தொலைவு சென்றாக வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அந்த நெடுந்தொலைவைக் கடப்பதில் சாதிப்பற்றிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும். அதில் ஒரு முக்கியமான கட்டம்தான் சுயசாதிப் பெருமையைக் கட்டுடைப்பது. சுயசாதிப் பெருமைக்குள் மறைந்திருக்கும் அழுகல்களைக் காட்சிப்படுத்துவது. சமூகத்தளத்தில் நடந்தாக வேண்டிய இந்தக் கட்டுடைத்தலுக்கும் காட்சிப்படுத்தலுக்கும் இலக்கியத்தளத்தில் அடிக்கல் நாட்டுகிற பணியைச் செய்கிறது பெத்தவன் சிறுகதை. எல்லோரும் படித்தாக வேண்டிய ஒரு கதைப்படைப்பு, எல்லோரும் பார்த்தாக வேண்டிய ஒரு திரைப்படம் என்று நான் கருதுவேனானால் அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்வதில்லை என்ற ஒரு வழிமுறையை இலக்கிய/திரைப்பட விமர்சனங்கள் எழுதத்தொடங்கிய நாளிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அந்த மரபுப்படி 'பெத்தவன்' கதை என்ன என்பதையும் இங்கு குறிப்பிடப் போவதில்லை.

ஒரு "கீழ்ச்சாதிப் பயல்|" பெரியசாமி மீது காதல் கொள்ளும் ஒரு ஆதிக்கசாதிப் பெண் பாக்கியம். அவளுடைய உயிரை அவளது பெற்றோரே அழித்துவிட வேண்டும் என்று ஊர்கூடி முடிவு செய்கிறது. ... "எங்களுக்காவா செய்யுறம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல, அதுக்காகத்தான்,| என்ற அந்த முடிவுக்கான நியாயம் ஊட்டப்படுகிறது. ஆயிரம் தலக்கட்டுக்காரன், வேட்டி கட்டிக்கிட்டுப் போகணும்ல என்ற வார்த்தைகள் சாதிப்பெருமையின் உடன்பிறப்புதான் ஆணாதிக்கம் என்பதன் வெளிப்பாடுகளே.

சாதிய ஆணாதிக்கத்தின் வெற்றி, பெண்களின் மூலமாகவே இதையெல்லாம் நிறைவேற்ற வைத்ததில் இருக்கிறது. பூச்சி மருந்த வாயில் ஊத்தி ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக்கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக்கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும், என்று எப்படி பாக்கியத்தைக் கொல்வது என்பதற்கு வழிசொல்கிறவள், இடுப்பில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண்!

பொதுவாகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனையும் சேர்த்துக்கொல்லவே பல ஊர்ப்பஞ்சாயத்துகளில் முடிவு செய்யப்படும். இங்கே பெரியசாமியை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்றால் அவன் காவல்துறையைச் சேர்ந்தவன்! அதிகாரம் எவ்வளவு முக்கியமானது என்பது நுட்பமாகச் சொல்லப்படுகிறது.

இது என் குடிதெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும்... என்று இரவோடு இரவாக மகளைக் கொன்றுவிட ஊருக்கு சத்தியம் செய்துகொடுக்கிறான் பாக்கியத்தைப் பெற்றவனான வண்டிக்காரன்மூட்டு பயினி (பழனி). பெத்தவன், பெத்தவள், பெத்தவனைப் பெத்தவள், உடன்பிறந்தாள் என, ஊராரின் முடிவை நிறைவேற்றியாக வேண்டிய குடும்பத்திற்குள் பாசத்திற்கும் சாதிக்கட்டுப்பாட்டிற்கும் இடையே அந்த இரவில் நடக்கும் மனப்போராட்டத்தை இவ்வளவு உயிரோட்டமாகக் கதையாக்க முடியுமா என்ற வியப்பு ஏற்படுகிறது.    குடும்பத்தில் ஆண் எடுக்கும் முடிவே இறுதியானது என்ற நியதி இவர்களது குடும்பத்தில் வேறு வகையில் செயல்படுகிறது...

காதலை சில தலைவர்கள் நாடகம் என்று கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கத்தில் சாதியமைப்பாகவும் அரசியல் கட்சியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிற உள்ளூர்க்கும்பல், காதலை வெறும் ஆணுறுப்பைத் தேடும் பெண்ணுறுப்பின் தினவாக மட்டுமே பார்க்கிறது. பிடிபட்ட பாக்கியத்தின் முன் இருபது முப்பது பையன்கள் வேட்டியை அவிழ்த்துக் காட்டி, இதுக்குத்தான அலையுற? எத்தன வேணும் எடுத்துக்க, என்று கூறுவதில் எவ்வளவு வக்கிரம் தோய்ந்த வன்முறை!

நிகழ்வுகளில் நேரடியாகத் தொடர்பு கொள்ளாத, ஆனால் சமூகத்தைப் படம்பிடித்துக்காட்டுகிற ஒரு ஜோசியக்காரன் வந்துபோகிறான். பாக்கியம் விவகாரம் சிக்கலானதைத் தொடர்ந்து அவளது ஜாதகத்தை பெண்ணாடம் பொன்னேரி ஜோசியக்காரனிடம் கொண்டுசெல்கிறார்கள். அதைப் பார்த்ததுமே அவன் யாரோ சொல்லிக்கொடுத்த மாதிரி இப்படிச் சொல்கிறான்: "ஜாதகப்படி புள்ளெ சோரம்போவும். இந்த ஜாதகத்தால பெரிய கலகம் மூளும்...." பின்னர் அதே ஜோசியக்காரன், பாக்கியத்தின் அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, "எனக்கு ஆறு புள்ளிவோ. இந்த வாய வித்துத்தான் அதுவுளுக்குச் சோறு போடுறன். புள்ள எங்கிருந்தாலும் உசுரோட இருந்தா போதும்னு வுட்டுட்டுப் போ. கச்சிகட்டாத. மகராசியா இருப்ப போ,|" என்கிறான். ஜோசியம் சொல்வது என்பது உண்மையில் நட்சத்திரங்களின் நடமாட்டத்தைப் பொறுத்ததல்ல, வாழ்க்கை நடப்பைப் பொறுத்ததுதான் என எடுத்துக்காட்டுகிற உரையாடல் அது. அப்படி வாயை விற்றுப் பிழைக்கிறவர்களிலும் சிலர் மாறுபட்டவர்களாக இருக்கக்கூடும்!

கதை முடிவில் ..... உசுரு போறாப்ல கத்திக்கிட்டு... காடு பூரா அது சத்தம்தான் என்று குரைத்துக்கொண்டிருக்கிறது பழனியின் நாய். மனித முயற்சிகள் தோற்றுவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், அந்த நாயின் பெருஞ்சத்தமாவது சாதியூர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும்.

இந்த ஒற்றைச் சிறுகதைப் புத்தகத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் பாரதி புத்தகாலயம் செய்திருப்பது ஒரு சமுதாயத் தொண்டு. முன்னுரை அளித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், "ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்றவேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்சனைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு, துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை, அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இப்படைப்பை வெளியிட்டுள்ளார். கண்களில் நீர் திரையிடாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியாது," என்று கூறுகிறார். கண்களில் திரையிடும் அந்த நீர், சமூகத்தின் சாதித்திரை கிழிக்கும் ஆவேச வெள்ளத்தின் துளி.

பெத்தவன்
இமையம்

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600 018
தொலைபேசி: 044 24332424,   24332924
மின்னஞ்சல்: வாயஅணைடிடிமளபஅயடை.உடிஅ
பக்கங்கள் 40
விலை ரூ.20

(தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிற 'வெண்மணி' பத்திரிகையின் இம்மாத இதழுக்காக நான் எழுதிய புத்தக அறிமுகக் கட்டுரை இது)

1 comment:

ச.தமிழ்ச்செல்வன் said...

பெத்தவன் பற்றி கச்சிதமான பதிவு தோழரே..