Monday 24 June 2013

சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்

“பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது...”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கிற தீர்ப்பு இது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் பிற மதங்களுக்கு மாறுகிறபோது, கல்வியிலும் அரசுப் பணியிலும் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு உரிமையைக் கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

சாதி நிலை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது, மதமாற்றத்தால் அல்ல என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அப்படியானால் ஒருவர் எந்த மதத்திற்கு மாறினாலும், மதம் என்கிற இழவே வேண்டாம் என்று உதறினாலும், பிறப்பின் அடிப்படையிலான அவரது சாதி அடையாளம் மாறாது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால் அதற்குரிய சட்ட உரிமைகள் தொடரும் என்றுதானே அர்த்தம்?

“இந்து மதத்திலிருந்து, சாதியை அங்கீகரிக்காத கிறிஸ்துவத்திற்கோ வேறு மதத்திற்கோ ஒருவர் மாறுகிறபோது அவரது சாதி நிலை இழக்கப்படுவதாகவே பொருள்” என்று முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதாம். சென்னை உயர்நீதிமன்றமே கூட 1952ல் “மதம் மாறுகிறவர் எந்த சாதியையும் சேராதவராகிறார்” என்று தீர்ப்பளித்திருக்கிறதாம். நீதிபதி இந்த இரண்டு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அப்படியானால் இந்து மதம்தான் கேவலமான முறையில் சாதிகளையும் சாதிப்பாகுபாடுகளையும் பராமரிக்கிறது என்று நீதிமன்றம் அறிவிக்குமா? அந்த மதத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கத் துணியுமா? சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் கூண்டோடு மதம் மாறிவிட வேண்டியதுதான் என்பதையும் நீதிமன்றம் அங்கீரிக்குமா?

இங்கே மதம் மாறுவது எளிது, ஆனால் சாதி மாறுவது இயலாது. அதாவது, கும்பிடுகிற கடவுளைக் கூட மாற்றிக்கொள்ளலாம், குறுகிய சாதி அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அதாவது, எந்தக் கடவுளாலும் சாதிச் சாக்கடையை சுத்தம் செய்ய இயலாது. காரணம், இந்திய சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே சாதிய வலையமைப்புதான்.

சாதியை ஒழிக்க மிக விரிவான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் தேவை. மிக மிக விரிவான சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் தேவை. மிக மிக மிக அடிப்படையான வர்க்கப்போராட்டத்தோடு இணைந்த இயக்கங்கள் தேவை. ஆம், வர்க்க-வர்ண போராட்டங்கள் பிரித்துப் பார்க்க முடியாதவை. அந்தப் போராட்டங்கள் முழுமையாக வெற்றிபெறும் வரையில் இட ஒதுக்கீடு (தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் கூறுவது போல் உரிமைப் பங்கீடு) போன்ற பாதுகாப்புகள் தொடரவே வேண்டும்.

சாதியை ஒழிக்க இன்னொரு தேவை காதல் உறவுகள். வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ நாடார் குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டவர். சென்ற ஆண்டில் தமிழக அரசின் 4ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு எழுதிய அவர் தன் சாதி அடிப்படையிலான உரிமையைக் கோரியபோது, மதம் மாறிவிட்டதால் அந்தச் சலுகை இல்லை என்று கலந்தாய்வின்போது சொல்லப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்!

சாதி ஒழிப்பிற்கும் காதல் செழிப்பிற்கும் நீண்ட நெடிய போராட்டப் பயணம் தேவை என்பதே மறுபடியும் உறுதியாகிறது.



No comments: