Friday 26 October 2007


நாடகக் களம்

காலக்கனவு

ரலாறு எத்தனையோ அடக்குமுறைகளைத் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. அவற்றில் மிக மோசமான அடக்குமுறை பெண்களை ஆணுக்கு சுகமும் சோறும் தருகிற எந்திரங்களாக ஆக்கியதுதான். இதன் இன்னொரு பக்கமாக, பெண்களின் வரலாற்றுப் பங்களிப்பும் அடக்கப் பட்டது. வரலாற்று நாயகன்கள் மட்டுமே போற்றப்படுகிறார்கள். நாயகிகள் போற்றப்படுவதில்லை.

வரலாறு, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகளை யும் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. பெண்ணுரிமை இயக் கம் அப்படிப்பட்ட எழுச்சி வரலாறுதான். மறைக்கப்பட்ட அல்லது பெரிதும் நினைவுகூரப்படாத அந்த வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறது, ‘மரப்பாச்சி’ குழுவி னரின் புதிய “காலக்கனவு” ஆவண நாடகம். “பெண்ணிய நோக்கில் நமது நவீன கால வரலாற்றை ஆராயும் ஒரு முயற்சி. முக்கியமான வரலாற்றுத் தருணங்களையும் நிகழ்வு களையும் பெண்கள் எவ்வாறு உணர்ந்தார்கள், அத்தகைய உணர்தலானது அவர்களை எவ்விதத்தில் பாதித்தது என் பதை அவர்களின் வார்த்தைகளினூடாக அரங்கேற்றும் ஒரு நிகழ்வு இது,” என்று அறிமுகக் குறிப்பில் கூறப்பட்டிருக் கிறது. பெண்விடுதலைச் சிந்தனைகள் பளிச்செனத் தெரி யும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான வரலாற்றுச் சங்கிலியின் கண்ணிகள் இதில் கோர்க்கப்பட்டுள்ளன.

பாரதிக்கும் முன்பே, பெண்விடுதலைக் குரல் பெண் களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டதைக் கூறுவதிலி ருந்து நாடகம் தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மேல்சாதிப் பெண்களைப் போல் ஆடை அணிவதற்காக நடத்திய போராட்டம், ஒதுக்கப்பட்ட பெண் களுக்கு கிறி°துவம் தந்த தன்னம்பிக்கை, தேவதாசி முறையிலிருந்து பெண்கள் மீட்கப்பட்டது... என அன்றைய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. பெண்ணின் சுய அடையாளத்திற்காக எழுந்து நின்ற மூதலூர் ராமாமிருதம் வெளிப்படுத்திய துணிச்சலான கருத்துக்கள், பெண் கல்விக்காகப் போராடிய முத்துலட்சுமி, இஸ்லாமிய மதத்திற் குள் பெண்ணின் இடத்திற்காக எழுதிய சித்தி ஜூனைதா பேகம் என்று பலப்பல தகவல்கள் வருகின்றன. பெரியாரின் இயக்கம் தொடங்கியதும் இந்தப் பெண்களுக்கு ஒரு வலுவான தளம் கிடைக்கிறது. “வைதீகமாக இருந்த திருமணத்தை சமுக ஒப்பந்தமாக்கியது சுயமரியாதை இயக்கம்,” என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது.

“வரலாற்றின் தொடர்ச்சி எப்படி அறுபட்டது,” என கேள்வி எழுப்பும் இந்த நாடகம், அறுபட்ட அத்தியாயங்களை தேடிப்படிக்கத் தூண்டுவதில் பெரும் வெற்றி பெறு கிறது. பெண்ணடிமைத் தனத்தை ஏதோ ஒரு வகையில் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனசாட்சி யில் காத்திரமான உறுத்தலை ஏற்படுத்துகிறது. இதை மாற்றியே தீர்வது என்று களம் இறங்குவோர் நெஞ்சங்களில் மகத்தான மரபு பற்றிய பெருமிதத்தையும், அதன் தொடர்ச்சி பற்றிய நம்பிக்கையையும் விதைக்கிறது.

“இடதுசாரி செயல்பாடுகளும், சுயமரியாதை இயக்கமும் பெண்களுக்கு உருவாக்கியளித்த வெளிகள், வாய்ப்பு கள்...” என அறிமுகத்தின்போது சொல்லப்படுகிறது. ஆனால், இடதுசாரி சிந்தனைகளோடு தங்களைப் பிணைத் துக் கொண்ட பெண் போராளிகள் பற்றி மேலோட்டமாக, அவர்களது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் நாடக நடிகர் விஸ்வநாத தாஸ் மற்ற நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, ஊருக்கு அஞ்சாமல் அவரோடு சேர்ந்து மேடை ஏறி நடித்த கே.பி.ஜானகி அம்மாள் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் கூடவா சொல்வதற்குக் கிடைக்கவில்லை? சிறையில் அடைக்கப்பட்ட லட்சுமி அம்மாள் தன் மகளின் முகத்தை கூட காண முடியாதவராக செத்துப்போய், புதைத்தார்களா, எரித்தார்களா என்பது கூட தெரியாமல் உடல் மறைக்கப்பட்டதே - அவரது போராட்டத்திலிருந்து சின்னக் குறிப்பு கூடவா கூறமுடியவில்லை?

“இடதுசாரிகள் இதில் பெரிய அளவுக்கு எதுவும் செய்துவிட வில்லை,” என்று ஒரு விமர்சனம் வேறு போகிற போக்கில் வீசப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் கட்டத்திலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் நிலவியது. வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான போராட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆளும் வர்க்கம் உருவாக்கிய நிலைமை அது. அந்தச் சூழலில், நாடகத்தில் குறிப்பிடப்படும் மற்ற பெண்களைப் போல் இடதுசாரி இயக்கத்தினரின் குரல் ஓங்கி ஒலிக்க முடியாமல் இருந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பாலின வேறுபாடின்றி தோழர்களின் கருத்துக்கள் இயக்கத்தின் நிலைபாடாகவே வெளிப்படு கின்றன. தனி நபர் சிந்தனையாக அடையாளம் பெறுவ தில்லை. அவ்வகையில் கம்யூனிஸ்ட் பெண்களின் வார்த்தைகள் இயக்கத்தின் குரலாக ஒலித்தே வந்துள்ளன. இன்று வரையில் சாதிக்க முடிந்துள்ள பெண்களின் உரிமை சார்ந்த சட்டங்களும் திட்டங்களும் இல்லாமல் வந்துவிட வில்லை. இந்த இயக்கமுறையைப் புரிந்து கொள்ளாமல் இடதுசாரிகள் பெரிதாக எதுவும் செய்துவிட வில்லை என்று எளிதாகத் தூக்கி எறிவது சில அறிவு ஜீவிகளுக்கு எளிதாகக் இருக்கிறது.

ஆயினும் இடதுசாரி இயக்கப் பெண்கள் பற்றி கவிஞர் இன்குலாப் வழங்கியுள்ள பாடல் கம்பீரமாய்க் காற்றில் பரவு கிறது.

நாடக வடிவம் குறிப்பிட வேண்டிய ஒன்று. துவக்கம், உச்சம், முடிவு என்ற கதை வடிவத்தில் அல்லாமல், நாட் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றி லிருந்து எடுத்த தகவல்களை நயம் கலந்து வழங்கியிருக் கிறார் வ.கீதா.

மேடை நிகழ்வாகவும் இல்லாமல், வட்டக் களமாகவும் இல்லாமல், தரையில் மையத்திலிருந்து மூன்று திசைகளுக்கு விரிக்கப்பட்டிருக்கும் நீளமான மூன்று பாய்கள்தான் நடிப்புக் களம்! அந்தப் பாய்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே நடிப்பாளர்கள் தகவல்களைப் பரிமாறியது முற்றிலும் புதிய அனுபவம். சில தகவல்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக அரங்கச் சுவர்களில் அவ்வப்போது நடிப்பாளர்கள் தொங்கவிட்டது ஒரு வரலாற்று வகுப்பறை உணர்வை ஏற்படுத்தியது.

பாய்களின் இடைவெளியில் பார்வையாளர்கள் அமர முடிகிறது. நாடகத்தின் செய்தி அவர்களோடு நெருக்கமாக இணைவதை உறுதிப் படுத்துகிறது பேராசிரியர் மங்கையின் நெறியாள்கை.

பொன்னி, கல்பனா, ரேவதி, கவின்மலர் ஆகிய நான்கே பேர்தான் நடிப்பாளர்கள். சரியான குரல் பயிற்சியுடன், தேவையான உடல் மொழியுடன் அவர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தை உருவகப்படுத்துகிறார்கள். ஆங்காங்கே பார்வையாளர்களின் பங்கேற்புக்கும் வழியமைக்கப்பட்டிருக் கிறது.

முழுமையான பாலின சமத்துவம் என்ற கனவு நன வாகிற காலம் வரும். பெண்ணியக் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, சமுதாயக் கண்ணோட்டத்திலும் அதனை நிறைவேற்றப் புறப்பட்டவர்களுக்குத் தோள்தரும் படைப்புகளில் ஒன்றாக இதனை வழங்கியிருக்கிற இவர்கள் வர லாற்றின் வாழ்த்துக்குரியவர்கள்.

-அ. குமரேசன்

Wednesday 17 October 2007


வெண் திரையில் ஒரு சிவப்பு வரலாறு:

ஏ.கே.ஜி.


ஏ.கே.ஜி. -இந்தியாவின் வர்க்கப் போரில், ஜனநாயகப் போராட்டக் களத்தில், மக்களின் உரிமை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் நரம்புகளில் முறுக்கேற்றுகிற பெயர். பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, தாக்குதல்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட வீரம், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத நெஞ்சுரம், சொந்தத் துயரங்களைப் பொருட்படுத்தாத தியாகம், அனைத்திற்கும் அடித்தளமாக சமுதாய விடுதலை லட்சியம் ... இவையெல்லாம் அந்த மூன்று எழுத்துக்களின் விரிவாக்கம். காக்கி அரைக்கால் சட்டை, மேல்சட்டை, தொப்பி - ஆகிய சீருடையுடன் செவ்வணக்கம் செலுத்தும் ஏ.கே. கோபாலன் திருவுருவப் படத்தை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கண்டிருக்கக் கூடிய புதிய தலைமுறை செங்கொடி இயக்கத் தோழர்களுக்கு அவரைப் பற்றி மூத்தவர்கள் சொல்கிறபோது அவரை நேரில் காண முடியாமல் போனது பற்றிய ஏக்கம் மிஞ்சும். மூத்த தோழர்களுக்கு அந்த கடந்த கால நினைவுகளில் மனம் நிறைந்த விஞ்சும்.இளையவர்களுக்கு அவரைச் சந்திக்கவும், மூத்தவர்களுக்கு அன்றைய அனுபவங்களுக்குச் சென்றுவரவும் ஒரு வாய்ப்பாக ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.


திரையையும் அரங்கையும் பார்வையாளர் சிந்தையையும் செம்மயமாக்கும் “ஏ.கே.ஜி.” படத்தை கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் காசர்கோடு மாவட்டக் குழுவும் அபுதாபி சக்தி இலக்கியக் குழுவும் இணைந்து உருவாக்கி வழங்கியுள்ளன. இயக்குநர்: தேசிய விருது பெற்ற “பிறவி” படத்தை இயக்கிய ஷாஜி என். கருண். சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை ஆட்சிக்காலத்தில் ஒரு மாணவனுக்கு நேர்ந்த கொடுமையை உலகறியச் செய்த படம் அது என்பதை நினைவு கூர்ந்தால், ஷாஜியின் கலை ஈடுபாடு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


ஏ.கே.ஜி.யின் கதையைப் படமாக்குகையில், காலமெல்லாம் மக்களுக்காகவே உழைத்த அவரது போராட்ட வாழ்க்கையையே அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இடுக்கி அணை கட்டுமானத்தின்போது முன்யோசனையோ மாற்று வழிகளோ இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து துவங்குகிறது படம்.அவசர நிலை ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்க அவர் நடத்திய போராட்டம் வரையில் முக்கியமான நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.அந்தப் போராட்டங்களில் அவர் வாங்கிய அடிகள், தாங்கிய வலிகள் ஆகியவையும் நமக்கு உணர்த்தப்படுகின்றன.


குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான போராட்டத்தை நடத்துகையில், ஆதிக்கச் சாதியினரின் திட்டமிட்ட தாக்குதலுக்கு இலக்காகிறார். விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது கைதிகளை மனிதர்களாக நடத்த வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போதும் சிறையதிகாரிகளால் தாக்கப்படுகிறார். கடலூர் சிறையில் அவரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கித் தோட்டாவை சக தோழர் நெஞ்சில் ஏற்று மடிய, கண்ணீர் வடிக்கும் ஏ.கே.ஜி.யின் போர்க்குணம் மேலும் கூர்மையாகிறது... இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட காயங்களும், முழுக்க முழுக்க மக்களுக்காகவே வாழ்ந்ததில் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போனதுமாகச் சேர்ந்துதானே பிற்காலத்தில் அவரது உடலில் நோய்கள் சிறைபுகக் காரணமாக இருந்தன என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.


விவசாயத் தொழிலாளர்களுக்காக நில மீட்புப் போராட்டத்தை நடத்திய போது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக அவர் மீது பாயும் காவல் துறையினரிடம் உபரி நிலம் பற்றிய காங்கிரஸ் அரசின் மோசடியான அறிவிப்பைக்காட்டி, “சட்டப்படி இது நோ-மேன்ஸ் லேண்ட் (யாருக்கும் உரிiயைற்ற நிலம்), இங்கே நாங்கள் வருவதை நீங்கள் எப்படித் தடுக்க முடியும்,” என்று வாதிட்டு அவர்களை அசர வைக்கிறார். அவரது இந்த வாதத் திறமைதான் கேரள சட்ட மன்றத்திலும், பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு வரலாறு படைத்தவராக அவருக்குப் புகழ் சேர்த்தது.


அவசர நிலை ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர் வலியுறுத்துகிற காட்சி ஒரு அரசியல் பாடம்.


போராட்ட இயக்கத்தில் அவரோடு தோள் சேரும் தோழர் சுசிலா பின்பு அவரது இல்லற வாழ்விலும் இணை சேர்கிறார். ஒரு நாள், அவர்களது அன்பு மகள் ஒரு தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டு வந்து காட்ட, “உனக்கும் தங்க நகை ஆசை வந்து விட்டதா,” என்று கேட்டு, கோபாலன் அடித்து விடுகிறார். பின்னர் அது கவரிங் நகைதான் என்பதை சுசிலா எடுத்துக் கூற, மகளை அரவணைத்துக் கொள்கிறார். அந்த மாமனிதர் தமது சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடின்றி வாழ நடத்திய மனப் போராட்டத்தை வெளிப்படுத்துகிற காட்சி இது.


தோழர்கள் வழியனுப்ப கோபாலன் சுசிலாவுடன் ஒரு ரயிலில் புறப்படுகிறார். ரயில் நிலையத்திற்குள் வயது முதிர்ந்த ஒரு ஏழைத் தம்பதி கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் நிற்பதைப்பார்த்து, ஓடத்துவங்கிய ரயிலிலிருந்து கீழே குதித்து, அவர்களது பிரச்சனையை விசாரித்தறிகிறார். அவர்களது மனுவோடு அவர்களையும் அந்தத் தோழர்களின் பொறுப்பில் ஒப்படைத்து ஏ.கே.ஜி. விடை பெறும் காட்சியில் எவ்வளவு ஆழமான அர்த்தம்!


வழக்கமான கதைப்படமாக இல்லாமல், அவரது சுயசரிதையின் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை நிகழ்வாக்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய தலைவர்கள் அவரைப் பற்றிக் கூறியிருப்பதைப் பதிவாக்கி, “ஆவணக் கதைப்படம்” என்ற புதிய வடிவில் இந்த 75 நிமிடப்படம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவம் உண்மை வாழ்க்கை அனுபவத்தோடு நம்மை நெருக்கமாக்குகிறது.


முகத் தோற்றம், உடல் அமைப்பு, நடமாட்டம், அந்த கம்பீரம் என ஏ.கே.ஜி.யாகவே நம் இதயத்தில் குடியேறுகிறார், நாடக - திரைப்பட இயக்குனரும் நடிகருமான பி. ஸ்ரீகுமார். சுசிலாவை நேரில் காணும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் அர்ச்சனா. எம். ஆர். சசிதரன் ஒளிஓவியம், பென்னி மாத்யூ-பால முரளி கலை இயக்கம், மகேஷ் நரயா படத் தொகுப்பு என அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்புமாகச் சேர்ந்து படத்தை உயிரோட்டமாக்கியுள்ளன. மலையாளம் பேசினாலும் மொழி கடந்து மக்களின் மனச் சிகரத்தில் கொடி நாட்டுகிறது அந்த உயிரோட்டம்.


“புதிய வசந்தம் வரும், அப்போது நான் இல்லாவிட்டாலும் எனது தோழர்கள் இருப்பார்கள்,” என்று ஏ.கே.ஜி. கூறுகிற வரிகளோடு படம் முடிகிறது. அந்த நம்பிக்கையில் ஒரு தோழமைக் கட்டளையும் ஒலிப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது நம்மால்.

-அ. குமரேசன்